சேஷசமுத்திரம் வன்முறையை கண்டித்து செப்.9-ல் காங்கிரஸ் ஆர்ப்பாட்டம்... ஈவிகேஎஸ். இளங்கோவன் அறிவிப்பு
சென்னை : சேஷசமுத்திரத்தில் நடைபெற்ற வன்முறை தாக்குதலை கண்டித்து, வரும் ஒன்பதாம் தேதி விழுப்புரத்தில் ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்று தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் ஈ.வி.கே.எஸ் இளங்கோவன் அறிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், சேஷசமுத்திரத்தில் அண்மையில் தேரோட்டத்தின் போது நடைபெற்ற வன்முறைக்குப் பிறகு, சமாதான பேச்சுவார்த்தை நடத்த மாவட்ட ஆட்சியர் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று குற்றம்சாட்டியுள்ளார்.
இந்தநிலையில், நேற்று இரண்டு தலித்களின் குடிசைகள் தீவைத்து கொளுத்தப்பட்டிருப்பதாகவும், இத்தகைய தாக்குதல்களில் காவல்துறையினர் தலித்களுக்கு எதிராக செயல்படுவதாகவும் இளங்கோவன் கண்டனம் தெரிவித்துள்ளார்.
சேஷசமுத்திரம் பகுதியில் சட்டம் ஒழுங்கை காப்பாற்ற உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ள அவர், வன்முறை தாக்குதலை கண்டித்து வரும் 9-ம் தேதி விழுப்புரத்தில் ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்றும் அறிவித்திருக்கிறார்.