அ.தி.மு.க. அரசின் ஊழலை எதிர்த்து 'வாங்க போராடலாம்..': அனைத்து கட்சிகளுக்கு ஈ.வி.கே.எஸ். அழைப்பு!!
சென்னை: அ.தி.மு.க. அரசின் ஊழலை எதிர்த்து போராட அனைத்து கட்சிகளுக்கும் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித் தலைவர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் அழைப்பு விடுத்துள்ளார்.
காங்கிரஸ் தலைமை அலுவலகமான சத்தியமூர்த்தி பவனில் செய்தியாளர்களுக்கு இன்று ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் அளித்த பேட்டி:

அ.தி.மு.க. அரசு நல்லாட்சியை தருவதாக கூறி ஆட்சிக்கு வந்தது. ஆனால் கடந்த 4 ஆண்டுகளாக லஞ்ச லாவண்ய ஆட்சியைத் தான் கொடுத்து வருகிறது. லஞ்சம் இல்லாத துறையே இல்லை என்று சொல்லும் அளவுக்கு எல்லா துறைகளிலும் ஊழல் மலிந்து கிடக்கிறது.
ஆட்சி கலைப்புகள் முன்னுதாரணம்
ஒரே ஒரு குற்றச்சாட்டுக்காக ஒரு அமைச்சர் மட்டும் கைது செய்யப்பட்டு உள்ளார். ஆளுநரிடம் எதிர்க்கட்சிகள், ஊழல் புகார் பட்டியல் கொடுப்பது புதிதல்ல. பல மாநிலங்களில் எதிர்க்கட்சிகள் கொடுத்த ஊழல் புகார் பட்டியல் மீது ஆளுநர்கள் நடவடிக்கை எடுத்து உள்ளனர். ஆட்சிகள் கலைக்கப்பட்ட வரலாறும் உண்டு.
நாங்கள் கொடுத்த ஊழல் புகார் மீது ஆளுநர் தக்க நடவடிக்கை எடுப்பார் என்று நம்புகிறோம். அதற்காக கால அவகாசத்தை கொடுப்போம். ஒருவேளை நடவடிக்கை எடுக்காவிட்டால் அடுத்த கட்ட நடவடிக்கை பற்றி யோசிப்போம்.
தமிழகத்தில் பல அமைச்சர்கள் சிறைக்கு போவார்கள். அப்போது நாங்கள் கூறிய புகார்களுக்கான அடிப்படை ஆதாரங்கள் என்ன என்பது தெரிய வரும்.
இவ்வாறு இளங்கோவன் கூறினார்.
கட்சிகளுக்கு அழைப்பு
காங்கிரசைப் போன்று தி.மு.கவும் ஊழல் பட்டியல் கொடுக்க இருப்பதாக மு.க ஸ்டாலின் கூறி இருக்கிறாரே என்று செய்தியாளர்கள் கேட்டதற்கு இதனை நல்ல விஷயம் என்று குறிப்பிட்ட ஈ.வி.கே.எஸ். அனைத்து எதிர்க்கட்சிகளும் ஒன்று சேர்ந்து அ.தி.மு.க. அரசின் ஊழலை எதிர்த்து போராட வேண்டும் என்றும் அழைப்பு விடுத்தார்.












Click it and Unblock the Notifications