ஆளுநர் என்ன தமிழகத்தின் பேரரசரா.. ஈவிகேஎஸ் இளங்கோவன் கடும் தாக்கு
Recommended Video

சென்னை: தமிழக ஆளுநர் தன்னை ஏதோ ராஜராஜ சோழன் போல, பேரரசர் போல நினைத்துக் கொள்கிறார். நிர்மலா தேவி குறித்து விசாரிக்க அவர் போட்ட ஒரு நபர் கமிஷன் என்ன ஆனது.. இதைக் கேட்டால் கைது செய்வதா என்று தமிழக முன்னாள் காங்கிரஸ் தலைவர் ஈவிகேஎஸ் இளங்கோவன் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
ஆளுநரை உடனடியாக மத்திய அரசு திரும்பப் பெற வேண்டும். இல்லாவிட்டால் மக்கள் திரண்டெழுந்து போராட்டம் நடத்தக் கூடிய சூழல் உருவாகி விடும் என்றும் இளங்கோவன் எச்சரித்துள்ளார்.

நக்கீரன் கோபால் கைதுக்கு கண்டனம் தெரிவித்துள்ள இளங்கோவன், வைகோவை கைது செய்ததையும் கண்டித்துள்ளார். இதுதொடர்பாக சன் செய்தி சானலுக்கு ஈவிகேஎஸ் இளங்கோவன் அளித்துள்ள பேட்டியில் கூறியிருப்பதாவது:
நக்கீரன் கோபால் கைது என்பது சர்வாதிகார செயல். நிர்மலா தேவி வழக்கு குறித்து எழுதினால் கைது செய்வதா. கோபால் கைது பேச்சுரிமை, எழுத்துரிமையை நசுக்கும் செயல் இது.
[நிர்மலா தேவி விவகாரம் பற்றிப் பேசினாலே கைதா.. சிபிஎம் கடும் சாடல்]
தமிழக ஆளுநர் என்னமோ தன்னை ராஜராஜ சோழன் போல, தமிழகத்தின் பேரரசர் போல நடந்து வருகிறார். அவர் இஷ்டத்திற்கு அனாவசியமாக பல பகுதிகளுக்கு செல்கிறார், ஆய்வு செய்கிறேன் என்கிறார்.
நிர்மலா தேவி விவகாரத்தில் உண்மை நிலை வெளி வர வேண்டும். அதைப் பற்றிப் பேசினால், எழுதினால் நடவடிக்கை என்பது ஏற்றுக் கொள்ள முடியாதது. இவர்தான் ஒரு நபர் கமிஷன் போட்டார். அது என்ன ஆனது. அதன் அறிக்கை என்ன ஆனது. ஆளுநர் மாளிகைக்கும், நிர்மலா தேவிக்கும் தொடர்பு உள்ளதா என்பதை விளக்க வேண்டிய பொறுப்பு ஆளுநருக்கு உள்ளது. இதுகுறித்து மத்திய அரசு விசாரித்து தவறு நடந்திருந்தால் தவறு செய்தவரை உள்ளே தள்ள வேண்டும்.
நக்கீரன் கோபாலை சந்திக்க அனுமதி கேட்ட மதிமுக பொதுச் செயலாளரையும் கைது செய்துள்ளனர். வைகோவின் கைது கண்டனத்துக்குரியது. இந்த நிலை நீடித்தால் கட்சி பாகுபாடின்றி அனைத்து ஜனநாயக சக்திகளும் இணைந்து போராட்டத்தில் ஈடுபட நேரிடும். ஆளுநரை எதிர்த்துப் போராட்டம் நடத்தும் சூழல் உருவாகும்.
எஸ்வி.சேகர், எச். ராஜா மீதெல்லாம் நடவடிக்கை எடுக்கவில்லை. நிர்மலா தேவி குறித்து பேசுவது என்ன தப்பு. ஆளுநர் எல்லாவற்றுக்கும் அப்பாற்பட்டவர் அல்ல. தமிழகத்தில் ஜனநாயகத்தை மீறி அவர் செயல்பட முடியாது. அவர் அத்துமீறி செயல்பட்டால் தமிழக மக்கள் பொறுக்க மாட்டார்கள் என்றார் ஈவிகேஎஸ் இளங்கோவன்.












Click it and Unblock the Notifications