லைட்டா கம்பி தட்டியதால் ஐ.சி.யு.வில் அட்மிட் ஆன விஜயதாரணி... இளங்கோவன் சந்திப்பு!
சென்னை: சட்டசபை வளாகத்தில் போராட்டம் நடத்த முயன்ற போது போலீசார் தடுத்ததில் லேசாக கம்பி தட்டி காயமடைந்த விஜயதாரணி எம்.எல்.ஏ தனியார் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவரை இன்று காங்கிரஸ் கட்சித்தலைவர் ஈ.வி.கே.எஸ் இளங்கோவன் நேரில் சந்தித்து நலம் விசாரித்தார்.
தொழிற்சங்கள் நேற்று நாடு தழுவிய போராட்டம் நடத்தினர். இது குறித்து விவாதிக்க அனுமதிக்க வேண்டும் என தமிழக சட்டசபையில் திமுக, காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சியினர் கோரிக்கை விடுத்தனர். ஆனால், இதற்கு சபாநாயகர் அனுமதி அளிக்கவில்லை. இதையடுத்து, வெளிநடப்பு செய்த எதிர்க்கட்சியினர் சட்டமன்ற வளாகத்தில் போராட்டத்தில் ஈடுபட முயன்றனர்.
அப்போது அங்கிருந்த காவல்துறையினர் போராட்டத்தை தடுக்க முயன்றனர். வாகனங்களுக்கு போடும் தடுப்பை எடுத்து எதிர்க்கட்சியினரின் முன்பாக வேகமாக இறக்கியதாக கூறப்படுகிறது. இதன் காரணமாக காங்கிரஸ் கட்சி எம்.எல்.ஏ. விஜயதாரணி தலையில் லேசாக தட்டி காயம் ஏற்பட்டது.
இதையடுத்து, ஆத்திரமடைந்த விஜயதாரணி எம்.எல்.ஏ தனது தலையில் காயம் ஏற்பட காரணமாக இருந்த காவலர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கூறி, வாக்குவாதத்தில் ஈடுபட்டார். இதனால், சட்டமன்ற வளாகத்தில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
இந்த நிலையில் விஜயதாரணி எம்.எல்.ஏ. நேற்று இரவு ராமச்சந்திரா மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்தனர். இந்த புகைப்படங்கள் ஊடகங்களிலும் வெளியானது.
இதனையடுத்து மருத்துவமனையில் சிகிக்சை பெற்று வரும் எம்.எல்.ஏ. விஜயதாரணியை தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் நேரில் சந்தித்து உடல்நலம் பற்றி விசாரித்தார். அப்போது நடந்த சம்பவங்களை கேட்டறிந்தார்.
லேசாக கம்பி தட்டியதற்கே தீவிர சிகிக்சைப் பிரிவா? அடுத்த தேர்தலில் சீட் வாங்க எப்படி எல்லாம் ஆக்ட் பண்றாங்கப்பா என்கின்றனர் அரசியல் நோக்கர்கள்.