'மன்னிப்பு கேட்க மாட்டேன்'.. இது இளங்கோவன்: 'பேசியதில் தவறில்லை'.. இது குஷ்பு
சென்னை: பிரதமர் - முதல்வர் சந்திப்பு பற்றி நான் தவறாக எதுவும் பேசவில்லை எனவே நான் ஒருபோதும் மன்னிப்பு கேட்கப் போவதில்லை என்று தமிழக காங்கிரஸ் கமிட்டித்தலைவர் ஈ.வி.கே.எஸ் இளங்கோவன் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.
பிரதமர் நரேந்திர மோடி, முதல்வர் ஜெயலலிதா சந்திப்பு பற்றி சர்ச்சைக்குரிய கருத்து தெரிவித்ததாக கூறி, தமிழக காங்கிரஸ் தலைவர் ஈவிகேஎஸ்.இளங்கோவன் உருவ பொம்மையை அதிமுகவினர் கொளுத்தினர். இளங்கோவனுக்கு எதிராக தமிழகம் முழுவதும் அதிமுகவினர் போராட்டங்களில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

மன்னிப்பு கேட்க மாட்டேன்
இதனிடையே இந்த போராட்டம் குறித்து கருத்து கூறியுள்ள ஈ.வி.கே.எஸ் இளங்கோவன், தான் பேசியதில் தவறு எதுவும் இல்லை என்று கூறியுள்ளார். மூன்று நாட்களுக்கு முன்னர் பேசிய பேச்சிற்கு இப்போது போராட்டம் நடத்துவது ஏன் என்று கேள்வி எழுப்பிய அவர், அதிமுகவினரின் போராட்டம் ஜனநாயகத்திற்கு விரோதமானது என்றார். தான் ஒருபோதும் மன்னிப்பு கேட்கப்போவதில்லை என்றும் இளங்கோவன் தெரிவித்துள்ளார்.

அதிமுகவின் அராஜகம்
அதிமுகவினரின் போராட்டம் குறித்து கருத்து கூறியுள்ள காங்கிரஸ் மகளிர் அணித்தலைவி விஜயதாராணியோ, பாஜக - அதிமுக இடையே ரகசிய உறவு எதற்கு? பகிரங்கமாக கூட்டணி பற்றி அறிவிக்க வேண்டியதுதானே என்றுதானே ஈ.வி.கே.எஸ் இளங்கோவன் கேட்டார். இதில் தவறு என்ன இருக்கிறது என்று கேட்டார்.

குஷ்பு கண்டனம்
ஈ.வி.கே.எஸ் இளங்கோவனுக்கு எதிராக அதிமுகவினர் போராடுவது ஜனநாயகத்திற்கு விரோதமானது. அதிமுக அமைச்சர்களின் ஊழல் பட்டியலை தலைவர் இளங்கோவன் ஆளுனரிடம் அளித்துள்ளார். அதை மறைக்கவே அதிமுகவினர் போராடுகின்றனர் என்றார்.

தவறு இல்லையே
ஜெயலலிதா அம்மையார் பற்றியும், பிரதமர் மோடி பற்றியும் காங்கிரஸ் கட்சியின் தலைவர் ஈ.வி.கே.எஸ் இளங்கோவன் கூறியதில் தவறு ஏதுமில்லை என்று கூறிய குஷ்பு, அதிமுகவினர் உருவபொம்மைகளை எரிப்பதை போலீசார் வேடிக்கை பார்க்கின்றனர் என்றார்.












Click it and Unblock the Notifications