"எங்கிருந்தாலும் வாழ்க" - ஜி.கே.வாசனை வாழ்த்திய ஈ.வி.கே.எஸ். இளங்கோவன்
சென்னை: காங்கிரஸ் கட்சியை விட்டு வெளியேறி புதிய இயக்கம் உருவாக்குவதாக அறிவித்திருக்கும் ஜி.கே.வாசனை அண்ணா சொன்னதைப் போல "எங்கிருந்தாலும் வாழ்க" என்று வாழ்த்துவதாக தமிழக காங்கிரஸ் கமிட்டித் தலைவர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் தெரிவித்துள்ளார்.
சென்னையில் தமது ஆதரவாளர்களுடன் ஆலோசனை நடத்திய முன்னாள் மத்திய அமைச்சர் ஜி.கே.வாசன், தாம் காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகி புதிய கட்சியைத் தொடங்குவதாக அறிவித்தார். ஜி.கே.வாசன் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்துக் கொண்டிருந்த போது காங்கிரஸ் கட்சியின் தலைமையகமான சத்திய மூர்த்தி பவனில் ஈ.வி.கே.எஸ். இளங்கோவனும் பேட்டியளித்தார்.

அப்போது ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் கூறியதாவது:
ஜி.கே.வாசன் காங்கிரஸில் தொடர வேண்டும்; காங்கிரஸ் எனும் வீட்டை விட்டு, அதுவும் சோதனையான இந்த கால கட்டத்தில் குடும்பத்தை விட்டு வெளியேறாதீர்கள் என்று கேட்டுக் கொள்கிறோம்.
எங்களைவிட வயதில் இளையவரான ஜி.கே.வாசன் இந்த குடும்பத்தின் செல்லப் பிள்ளை. அவர் தன்னைச் சுற்றியிருக்கும் நான்கு பேரின் பேச்சைக் கேட்டு வெளியேற வேண்டாம். தமிழகத்தில் நால்வர் அணி எப்போதும் வென்றதில்லை.
எனக்குத் தனிப்பட்ட முறையில் குடும்ப பிரச்சனைகளில் ஆதரவாக இருந்தவர் மூப்பனார். அவரது மகனின் எதிர்காலம் கருதி நலன் கருதி காங்கிரஸில் நீடிக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.
தற்போது ஜி.கே.வாசன் புதிய இயக்கம் தொடங்குவதாக அறிவித்திருக்கிறார். அவரை பேரறிஞர் அண்ணா கூறியதைப் போல எங்கிருந்தாலும் வாழ்க என்று வாழ்த்துகிறோம். எப்படியாக இருந்தாலும் நீங்கள் மீண்டும் காங்கிரஸுக்குத்தான் வர வேண்டும்.
அதனால் எங்களது உணர்வை, உள்ளத்தை காயப்படுத்த வேண்டாம். காங்கிரஸ் கட்சியில் கடந்த 100 ஆண்டுகளில் எத்தனையோ பேர் வெளியேறி இருக்கின்றனர். ஆனால் எத்தனை பேர் காங்கிரஸ் கட்சியை விட்டு வெளியேறினாலும் கட்சி அழிந்துவிடாது.
இப்போதும் வாசன் தமது கட்சியின் பெயரைக் கூட அறிவிக்கவில்லை. அதனால் அவருக்கு கால அவகாசம் இருக்கிறது. காங்கிரஸ் கட்சியில் ஜி.கே.வாசன் தொடர வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.
இவ்வாறு ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் கூறினார்.












Click it and Unblock the Notifications