தேர்தல் நேரத்தில் மட்டுமே சேரும் கள்ளக்காதலர்கள் அதிமுகவும், பாஜகவும்.. இளங்கோவன் சர்ச்சை பேச்சு
சென்னை: அதிமுக, பாஜக இடையே கள்ளக்காதல் உள்ளது. தேர்தல் நேரத்தில் மட்டுமே அவர்கள் சேருவார்கள் என்று தமிழக காங்கிரஸ் தலைவர் ஈவிகேஎஸ் இளங்கோவன் கூறியுள்ளார்.
அதேசமயம், திமுக கூட்டணி என்று வரும்போது அதில் காங்கிரஸையும் சேர்ப்போம் என்று திமுக தலைவர் கருணாநிதி அறிவித்துள்ளதை ஈவிகேஎஸ் இளங்கோவன் வரவேற்று மகிழ்ச்சி தெரிவித்துள்ளார். இதுகுறித்து விரைவில் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியுடன் பேசப் போவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து சென்னையில் இன்று அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில், தமிழக காங்கிரசை பொறுத்தவரை தனித்து போட்டியிடவே விரும்புகிறது. ஆனால் தீய சக்திகளை அகற்றவும், பொறுப்பற்ற ஆட்சியை தூக்கி எறியவும் மதசார்பற்ற ஆட்சி வரவும் நாங்கள் துணை நிற்போம்.
திமுக தலைவர் கருணாநிதி தங்கள் கூட்டணி அழைப்பில் காங்கிரசை விலக்கி வைக்க மாட்டோம் என்று கூறி உள்ளார். அதற்காக அவருக்கு நன்றி தெரிவிக்கிறேன். மட்டற்ற மகிழ்ச்சி அடைகிறேன். எனினும் கட்சி மேலிடம் தான் கூட்டணி பற்றி முடிவு எடுக்கும். இது குறித்து சோனியாவை நான் எப்போது வேண்டுமானாலும் சந்திக்க வாய்ப்பு உள்ளது. அப்போது எடுத்து கூறுவேன். சோனியா விருப்பப்படி நடக்கும் .
அதிமுக - பாஜக இடையே கள்ளக்காதல் உள்ளது. அவர்கள் தேர்தல் நேரத்தில் மட்டுமே சேருவார்கள். பிறகு போய் விடுவார்கள்.
பதவி சுகத்துக்கான இயக்கம் காங்கிரஸ் அல்ல. மக்கள் நலனுக்காக உருவாக்கப்பட்ட இயக்கம். தோல்வியில் கூட நாங்கள் துவண்டு விட மாட்டோம். சில கட்சிகள் போல காணாமல் போய் விடவும் மாட்டோம். தியாக உணர்வுடன் தொடங்கப்பட்டதுதான் காங்கிரஸ் கட்சி.
காமராஜர் ஆட்சிக்கு பிறகு வந்த திராவிட கழக ஆட்சிகளில் தமிழகத்தின் வளர்ச்சி பூஜ்யமாக உள்ளது. காமராஜர் ஆட்சியில்தான் ஆண்டுதோறும் ஏரி, குளங்கள் தூர்வாரப்பட்டது. புதிய அணைகள் கட்டப்பட்டது.
ஜல்லிக்கட்டு விவகாரத்தில் காங்கிரஸைக் குறை கூறுவது சரியல்ல. பாஜக ஆட்சிக்கு வந்து ஒன்றரை வருடம் ஆகிறது. ஆனால் இதுவரை ஜல்லிக்கட்டு தொடர்பாக எதையும் அவர்கள் செய்வதில்லை என்றார் இளங்கோவன்.