ஓ.பி.எஸ். தமிழகத்தின் அவமானம்.. மெளன சாமியார்.. செயல்படாத முதல்வர்: ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் 'பொளேர்'
சென்னை: முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் தமிழகத்தின் அவமானம்; மெளன சாமியார்.. செயல்படாத முதல்வர் என்று தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித் தலைவர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் கடுமையாக தாக்கியுள்ளார்.
ஆனந்த விகடன் வார இதழுக்கு ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் அளித்துள்ள பேட்டியில் கூறியிருப்பதாவது:

மெளன சாமியார்
தமிழக முதலமைச்சர் ஓ.பி.எஸ் வெறும் மௌன சாமியார். காவிரிப் பிரச்னையாக இருந்தாலும், இலங்கைப் பிரச்னையாக இருந்தாலும் பிரதமருக்குக் கடிதம் எழுதுவதோடு தன் கடமை முடிந்தது என நினைக்கிறார்.

ஆட்சி செய்ய முடியலையோ?
ஆந்திராவில் 20 தமிழர்கள் கொல்லப்பட்டதற்கும் சந்திரபாபு நாயுடுவுக்கு ஒரு கடிதம் எழுதிவிட்டு அமைதியாகிவிட்டார். அவர் ஆட்சி செய்யவில்லையா அல்லது ஆட்சி செய்ய முடியவில்லையா எனத் தெரியவில்லை.

செயல்படாத முதல்வர்
மக்களின் முதல்வர், தமிழக முதல்வர் என்ற வார்த்தை ஜாலங்களைத் தாண்டி இவரை செயல்படாத முதல்வர் என அழைப்பதுதான் பொருத்தமாக இருக்கும். ஓ.பி.எஸ் - தமிழகத்தின் அவமானம்.

இவர்கள்தான் ஊழல் அமைச்சர்கள்
தமிழக நெடுஞ்சாலைத் துறை அமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி; இன்னொருவர் சுற்றுச்சூழல் துறை அமைச்சர் தோப்பு வெங்கடாசலம் ஆகியோரது ஊழல்களைத்தான் அம்பலப்படுத்துவேன்.
ஈரோடு மாவட்டம் பெருந்துறை சிப்காட் வளாகத்தில் கோகோ-கோலா கம்பெனியை கொண்டுவருவதற்காக தமிழ்நாடு அரசு 72 ஏக்கர் நிலத்தை ஒதுக்கி இருக்கிறது. ஏழை விவசாயிகளிடம் இருந்து அபகரித்து, இந்த நிலத்தைக் கொடுத்திருக்கிறார்கள். 72 ஏக்கர் நிலத்தை, 99 வருடக் குத்த கைக்கு அடிமாட்டு விலைக்குக் கொடுத்திருக்கிறார்கள்.
இந்த கம்பெனி செயல்பட ஆரம்பித்தால் ஒரு நாளைக்கு சுமார் 35 லட்சம் லிட்டர் தண்ணீர் தேவை. நிலத்தடி நீரை உறிஞ்சி எடுத்து அந்தப் பகுதியையே பாலைவனமாக மாற்றிவிடுவார்கள். இதைச் சுற்றி 80-க்கும் மேற்பட்ட கிராமங்கள் உள்ளன. அங்கு நடைபெறும் விவசாயமும் குடிநீர் ஆதாரமும் அழிந்துவிடும். இவை எவற்றையும் கருத்தில்கொள்ளாமல் அனுமதி கொடுத்திருக்கிறார்கள். பெருந்துறை பகுதி மக்கள் எல்லோரும் கடும் கோபத்தில் இருக்கிறார்கள்.
இவ்வாறு இளங்கோவன் கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications