இந்தியாவை முன்னேற்றப் பாதையில் அழைத்துச் செல்வது நம் கடமை- ஈ.வி.கே.எஸ் இளங்கோவன்
சென்னை: இந்தியாவை முன்னேற்றப் பாதையில் அழைத்துச் செல்ல வேண்டிய கடமை காங்கிரஸ்க்கு இருக்கிறது என தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் ஈ.வி.கே.எஸ் இளங்கோவன் தெரவித்துள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில், "ஆங்கிலேய ஏகாதிபத்தியத்தை எதிர்த்து இந்திய தேசிய காங்கிரஸ் தொடங்கி 60 ஆண்டுகளுக்கும் மேலாக சத்தியம், அகிம்சை கொள்கைகளின் அடிப்படையில் சத்தியாகிரகம், ஒத்துழையாமை ஆகிய போராட்ட திட்டங்களை கடைப்பிடித்து 1947 இல் இந்தியா சுதந்திரம் பெற்றது.
இந்தியாவின் முதல் பிரதமராக ஜவஹர்லால் நேரு அவர்கள் பொறுப்பேற்று நவபாரதத்தை உருவாக்க அடித்தளம் அமைத்தார். சுதந்திரம் பெற்று 68 ஆண்டுகள் உருண்டோடிவிட்டன. உலகத்தின் மிகப்பெரிய வல்லரசுகளில் ஒன்றாக இந்தியா வளர்ந்திருக்கிறது. இந்தியாவை 55 ஆண்டுகளுக்கும் மேலாக ஆட்சி செய்து வளர்த்தெடுத்த பெருமை இந்திய தேசிய காங்கிரசுக்கு உண்டு. இந்தியாவில் மக்கள் பார்க்கிற வளர்ச்சியை ஏற்படுத்தியதில் பெரும்பங்கை காங்கிரஸ் கட்சி வகித்தது என்பதில் யாருக்கும் மாற்றுக்கருத்து இருக்க முடியாது.
விடுதலைப் போராட்ட காலத்திலும், அதற்குப் பின்பும், இந்திய மக்களை மதரீதியாக பிளவுபடுத்துகிற சக்திகள் தொடர்ந்து செயல்பட்டு வருகிறார்கள். மதச்சார்பற்ற கொள்கையை கடைப்பிடித்து மதநல்லிணக்கத்தை உருவாக்குகிற காங்கிரஸ் கட்சியின் முயற்சிகளுக்கு முட்டுக்கட்டை போடுகிற பணியை மதவாத சக்திகள் செய்து வருகின்றன. இவற்றை எதிர்கொண்டு வென்றெடுக்க வேண்டிய இமாலயப் பணி தேசிய சக்திகளுக்கு இருக்கிறது.
சுதந்திர இந்தியா காணாத அச்சுறுத்தல் மதவாத அடிப்படையில் தேசிய அளவில் இன்றைக்கு உருவாகியிருக்கிறது. இந்த பேராபத்திலிருந்து இந்தியாவையும், மக்களையும் பாதுகாத்து முன்னேற்றப் பாதையில் அழைத்துச் செல்ல வேண்டிய மகத்தான பொறுப்பும், கடமையும் காங்கிரஸ் கட்சிக்கு இருக்கிறது. அதை நிறைவேற்றுவதற்கு இந்திய மக்கள் துணை புரிவார்கள் என்கிற நம்பிக்கையும் இருக்கிறது. இந்திய மக்கள் அனைவருக்கும் மகிழ்ச்சிகரமான சுதந்திரதின வாழ்த்துக்களை தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி சார்பில் தெரிவித்துக் கொள்கிறேன்" என்று அவர் தெரிவித்துள்ளார்.