தொகுதிப் பங்கீடு குறித்து ‘படித்த மேதை’ ப.சிதம்பரத்துக்கெல்லாம் பதிலளிக்க முடியாது: ஈவிகேஎஸ்
டெல்லி: திமுக கூட்டணியில் விருப்பமில்லாத தொகுதிகள் காங்கிரஸிற்கு ஒதுக்கப்பட்டுள்ளதாக முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் தெரிவித்த கருத்துக்கு பதில் அளிக்க முடியாது என தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித் தலைவர் ஈவிகேஎஸ் இளங்கோவன் தெரிவித்துள்ளார்.
தமிழக சட்டசபைத் தேர்தலில் திமுகவுடன் காங்கிரஸ் கூட்டணி அமைத்துள்ளது. இந்தக் கூட்டணியில் காங்கிரஸிற்கு 41 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன. ஆனால், இந்த தொகுதிப் பங்கீடு குறித்து சமீபத்திய நிகழ்ச்சி ஒன்றில் எதிரான கருத்து தெரிவித்திருந்தார் காங்கிரஸ் மூத்தத் தலைவர்களில் ஒருவரான முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம்.
இந்நிலையில், தங்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ள 41 தொகுதிகளுக்கான வேட்பாளர்களை இறுதி செய்வதற்காக தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித் தலைவர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் தலைமையில் மாநில காங்கிரஸ் தலைவர்கள் பலர் டெல்லி சென்றுள்ளனர்.

முகுள் வாஸ்னிக்குடன் சந்திப்பு...
இது தொடர்பாக அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி பொதுச் செயலாளரும் தமிழக காங்கிரஸ் மேலிடப் பொறுப்பாளருமான முகுல் வாஸ்னிக்கை நேற்று அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி தலைமையகத்தில் இளங்கோவன் சந்தித்து ஆலோசனை நடத்தினார்.

தோல்வி பயம்...
அதனைத் தொடர்ந்து செய்தியாளர்களைச் சந்தித்தார் இளங்கோவன். அப்போது ப.சிதம்பரம் பேச்சு உள்பட பல்வேறு கேள்விகளுக்கு அவர் பதிலளித்தார். அதில், அவர் கூறுகையில், "தமிழகத்தில் ஆளும் முதல்வர் ஜெயலலிதாவுக்கு தோல்வி பயம் வந்துவிட்டது. அதன் விளைவாகவே அறிவிக்கப்பட்ட அதிமுக வேட்பாளர்களை அடிக்கடி மாற்றி வருகிறார். பண பலம் மூலம் மக்களை ஏமாற்றலாம் என ஜெயலலிதா நம்புகிறார். எத்தனை வேட்பாளர்களை ஜெயலலிதா மாற்றினாலும் வெற்றி என்பது அவருக்கு எட்டாக்கனிதான்.

வேட்பாளர் பட்டியல்...
காங்கிரஸ் வேட்பாளர் பட்டியலை இறுதி செய்ய கட்சியின் மத்திய தேர்தல் குழுக் கூட்டம் செவ்வாய்க்கிழமை (இன்று) காலையில் நடைபெறுகிறது. எனவே, அன்று இரவுக்குள் வேட்பாளர் பட்டியல் வெளியாக வாய்ப்புள்ளது.

ப.சிதம்பரம் கருத்து...
ப.சிதம்பரம் அனுபவத்தில் மூத்தவர். மிகப்பெரிய படித்த மேதை. தொகுதிப்பங்கீடு பற்றி அவர் வெளியிடும் கருத்துகளுக்கு எல்லாம் என்னால் பதில் அளிக்க முடியாது. எங்கள் கூட்டணியில் புதிய தமிழகமும், சிறுபான்மையினர் கட்சிகளும் போட்டியிடுகின்றன. அவர்களுக்கு சில தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளதால், காங்கிரஸ் கட்சிக்கு 41 தொகுதிகள் கிடைத்தன. எனினும், சிறுபான்மையினரை ஆதரிக்கும் வகையில் காங்கிரஸ் வேட்பாளர் பட்டியலில் இஸ்லாமிய, கிறிஸ்துவ சமூகத்தைச் சேர்ந்தவர்களுக்கும் வாய்ப்பு வழங்கப்படும்.

திருப்திபடுத்த இயலாது...
ஒருவேளை காங்கிரஸ் கட்சி, 234 தொகுதிகளிலும் போட்டியிடும் நிலை ஏற்பட்டால் அனைவரையும் திருப்திப்படுத்தலாம். ஆனால், தற்போதைய சூழலில் 1,000 தொகுதிகளில் காங்கிரஸ் கட்சி போட்டியிட்டாலும்கூட கட்சித் தலைவர்களைத் திருப்திப்படுத்த முடியாது. காங்கிரஸ் கட்சியில் மட்டுமின்றி எல்லா கட்சிகளிலும் இதேநிலை தான் நிலவுகிறது என்றார் இளங்கோவன்.












Click it and Unblock the Notifications