மிரட்டல் சோதனைகளுக்கு காரணமானவர்கள் வருத்தப்படுவார்கள்...ஈவிகேஎஸ் இளங்கோவன் பொளேர்!
அரசியலில் தனக்கு வேண்டாதவர்களை குறிவைத்து பாஜக மிரட்டல் சோதனைகளை மேற்கொண்டு வருவதாக காங்கிரஸ் மூத்தத் தலைவர் ஈவிகேஎஸ். இளங்கோவன் குற்றஞ்சாட்டியுள்ளார்.
சென்னை : பாஜகவின் மிரட்டல் சோதனைகள் தொடர்ந்தால் மக்கள் அராஜக பாஜக அரசை புறக்கணிப்பார்கள் என்று காங்கிரஸ் மூத்தத் தலைவர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் எச்சரித்துள்ளார்.
முன்னாள் நிதியமைச்சர் ப.சிதம்பரத்தின் வீட்டில் காலை 6 மணி முதல் 8 மணி நேரம் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தினர். இந்த சோதனைக்கு கண்டனம் தெரிவித்து ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது :

பாஜக அரசு அமலாக்கத்துறை சோதனை, அதனைத் தொடர்ந்து சிபிஐ சோதனை என்று முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரத்தை குறி வைத்து தொடர் தாக்குதல்களை மேற்கொண்டு வருகிறது. அரசியலில் தனக்கு வேண்டாதவர்களைக் குறிவைத்து இது போன்ற மிரட்டல்களை பாஜக மேற்கொள்வது கடும் கண்டனத்திற்குரியது.
மோடி அரசின் வெற்று மிரட்டல்களுக்கு எந்தக் காங்கிரஸ் தலைவர்களும், தொண்டர்களும் அஞ்சமாட்டார்கள். வரும் காலங்களில் இதற்கு காரணமானவர்கள் வருத்தப்பட நேரிடும்.
மிரட்டல் சோதனைகள் தொடர்ந்தால் மக்கள் பாஜக அரசை புறக்கணிப்பார்கள், என்று இளங்கோவன் அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.












Click it and Unblock the Notifications