அசத்துகிறார் முதல்வர் ஓ.பி.எஸ்.. மனதார பாராட்டிய ஈவிகேஎஸ் இளங்கோவன்
முதல்வராகப் பதவியேற்றது முதலே சிறப்பாக செயல்பட்டு வருகிறார் முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் என்று ஈவிகேஎஸ் இளங்கோவன் பாராட்டியுள்ளார்.
ஈரோடு: தமிழக முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் மதிக்கப்பட வேண்டியவராக இருக்கிறார். கட்சிக்கு அப்பாற்பட்டு மதிக்கப்பட வேண்டியவராக இருக்கிறார். அவரது செயல்பாடுகள் பாராட்டுக்குரியவை. அவரை நான் பாராட்டுகிறேன் என்று முன்னாள் தமிழக காங்கிரஸ் தலைவர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் கூறியுள்ளார்.
ஈரோட்டில் இன்று செய்தியாளர்களைச் சந்தித்தபோதுதான் முதல்வரை இப்படிப் பாராட்டித் தள்ளினார் இளங்கோவன். செய்தியாளர்கள் சந்திப்பின்போது இளங்கோவன் கூறியதிலிருந்து:
கட்சிக்கு அப்பாற்பட்டு மதிக்கப்பட வேண்டியவர் முதல்வர் ஓ.பன்னீர் செல்வம். எதிர்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின் முன்னே சென்ற தனது காரை நிறுத்தி பின்னால் வந்த முதல்வர் காருக்கு வழி விட்டு மரியாதை செலுத்தி உள்ளார். அதே போல் முதல்வர் பன்னீர்செல்வம், எதிர்கட்சி தலைவர் ஸ்டாலின் கார் செல்கிறது. கவனமாக செல்லுங்கள். அவர் முன்னே போகட்டும் என்கிறார். இந்த அரசியல் நாகரீகம் பாராட்டுக்குரியது. கட்சிக்கு அப்பாற்பட்டு முதல்வர் பன்னீர் செல்வம் சிறப்பாக செயல்பட்டு வருகிறார். இதை நான் பாராட்டுகிறேன்.
ஆனால் அதிமுக பொதுச் செயலாளர் சசிகலா முதல்வர் ஓ.பன்னீர் செல்வத்தை மதிப்பது இல்லை. அவமானப்படுத்தி வருகிறார். அதிமுக சட்டசபை உறுப்பினர்கள் கூட்டத்தில் முதல்வர் பன்னீர்செல்வத்தை கூட்டத்தோடு கூட்டமாக அமர வைத்திருந்தார். இது அவரை அவமானப்படுத்தும் செயல் ஆகும்.
முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் பதவி ஏற்றதிலிருந்து மிக சிறப்பாக பணி புரிந்து வருகிறார். ஆனால் மாணவர்கள் நடத்திய ஜல்லிக்கட்டு போராட்டம் முடிவுக்கு வரும் போது ஏற்பட்ட சம்பவம் கண்டிக்கத்தக்கது. ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக தமிழ் உணர்வோடு மாணவ- மாணவிகள் மற்றும் இளைஞர்கள், இளம் பெண்கள் போராட்டம் நடத்தியது பாராட்டக்குரியது. ஆனால் போராட்டம் நடத்தியவர்களை கலைப்பதற்காக போலீசார் நடந்து கொண்ட விதம் வன்மையாக கண்டிக்கத்தக்கது. இந்த போராட்டத்தின் போது தேச விரோத சக்திகள் புகுந்து விட்டதாக கூறப்படுகிறது. இது பற்றி விசாரிக்க ஓய்வு பெற்ற நீதிபதி தலைமையில் விசாரணை கமிஷன் அமைக்க வேண்டும். இந்த அறிக்கையை 2 மாதத்துக்குள் சமர்ப்பிக்க வேண்டும்.
பீட்டா அமைப்புக்கு மத்தியில் முன்பு ஆட்சியில் இருந்த காங்கிரஸ் தான் ஆதரவு அளித்தது என்பது தவறானது. தமிழக கலாச்சார விளையாட்டான ஜல்லிக்கட்டு நடத்த எதிர்ப்பு வரும் என்று அப்போது காங்கிரஸ் நினைக்க வில்லை. நாங்கள் ஜல்லிக்கட்டுக்கு எப்போதும் ஆதரவாகவே உள்ளோம். மத்தியில் காங்கிரஸ் ஆட்சியின் போதும், தமிழகத்தில் திமுக ஆட்சியிலும் ஜல்லிக்கட்டு நடந்துள்ளது என்றார் இளங்கோவன்.