கருணாநிதி வாக்களித்த கோபாலபுரம் வாக்குச்சாவடியில் எந்திரம் பழுது
சென்னை: மத்திய சென்னையில் உள்ள கோபாலபுரத்தில் அமைக்கப்பட்ட வாக்குச்சாவடியில் மின்னணு வாக்குப்பதிவு எந்திரம் பழுதானதால் வாக்குப்பதிவு தாமதமாக துவங்கியது.
நாடாளுமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு தமிழகம் மற்றும் புதுவையில் உள்ள 40 தொகுதிகளிலும் இன்று காலை 7 மணிக்கு துவங்கியது. கோடை காலம் என்பதால் மக்கள் வெயில் அதிகம் வரும் முன்பு வாக்களிக்க வாக்குச்சாவடிகளில் நீண்ட வரிசையில் நின்று வாக்களித்தனர்.
இந்நிலையில் மத்திய சென்னை தொகுதிக்குட்பட்ட கோபாலபுரத்தில் இருக்கும் சாரதா பள்ளியில் அமைக்கப்பட்ட வாக்குச்சாவடியில் இருக்கும் மின்னணு வாக்குப்பதிவு எந்திரத்தில் பழுது ஏற்பட்டது. வாக்குப்பதிவு துவங்கும் முன்பே பழுது கண்டறியப்பட்டது. இதனால் வாக்குப்பதிவை காலை 7 மணிக்கு துவங்க முடியவில்லை.
எந்திரத்தின் பழுது சரிசெய்யப்பட்டு வாக்குப்பதிவு 40 நிமிடங்கள் தாமதமாக துவங்கியது. இந்த பள்ளியில் தான் திமுக தலைவர் கருணாநிதி மற்றும் மு.க. ஸ்டாலின் ஆகியோர் வாக்களித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.