மாணவி நிவேதிதாவுக்கு வேண்டிய உதவிகளைச் செய்வோம் - முன்னாள் மேயர் மா சுப்ரமணியன்
சென்னை: சென்னை அரசு பொது மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வரும் ஏழை மாணவி நிவேதிதாவுக்கு வேண்டிய உதவிகளைச் செய்வோம் என முன்னாள் மேயர் மா சுப்பிரமணியன் தெரிவித்தார்.
திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டை பத்தாங்காடு கிராமத்தில் உள்ள கூலித் தொழிலாளி ராஜேந்திரன் - திலகவதி மகளான நிவேதிதா, ப்ளஸ்டூவில் அதிக மதிப்பெண்கள் பெற்று பிஇ கம்ப்யூட்டர் சயின்ஸ் படித்து வந்தார்.
மூன்றாம் ஆண்டு படித்துக் கொண்டிருந்த அவருக்கு திடீரென வயிற்று வலி. விடுப்பில் ஊருக்குத் திரும்பிய மாணவி பல மருத்துவமனைகளில் சிகிச்சைப் பெற்றும் உடல் குணமடையில்லை. இப்போது சுகாதாரத் துறைச் செயலர் ராதாகிருஷ்ணன் உதவியுடன் சென்னை அரசு பொது மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்றுவருகிறார்.

அவரது நிலை குறித்து ஒன்இந்தியா தமிழில் செய்தி வெளியானததைத் தொடர்ந்து, அமீரகத்தில் வசிக்கும் திமுகவினர் நிதியுதவி அளித்துள்ளனர். அந்தத் தொகையை நிவேதிதாவின் தந்தையிடம் நேற்று வழங்கினார் சென்னை முன்னாள் மேயர் மா சுப்பிரமணியன்.
இதுகுறித்து மா சுப்பிரமணியத்திடம் ஒன்இந்தியா சார்பில் பேசினோம்.
அவர் கூறுகையில், "இந்தப் பெண்ணின் நிலை குறித்து கேள்விப் பட்டதும், அமீரகத்தில் வாழும் திமுகவினர் நிதி அனுப்பியிருந்தனர்.
நேற்று நான்தான் நேரில் போய் அந்தத் தொகையைக் கொடுத்தேன். அரசு மருத்துவமனை என்பதால் செலவு குறித்து பிரச்சினை இல்லை. அப்படியே ஏதாவது தேவை என்றாலும் உதவி செய்வதாக உறுதியளித்திருக்கிறேன்.

அந்தப் பெண்ணின் கல்லூரியில் இதுபற்றி ஏதாவது பேச வேண்டும் அல்லது பணம் செலுத்த வேண்டும் என்றாலும் செய்யத் தயாராக உள்ளோம்.
குடும்பத்தினருக்கு உதவி தேவைப்பட்டாலும் கேட்கச் சொல்லியிருக்கிறேன். எனது தொலைபேசி எண்ணை அவர்களிடம் கொடுத்து, எந்த நேரத்திலும் உதவிக்கு அழைக்கக் கூறியிருக்கிறேன். தேவைப்பட்டால் கழகத்தின் சார்பிலும் உதவத் தயாராக உள்ளோம்," என்றார்.












Click it and Unblock the Notifications