மாஜி அமைச்சர் அழகு திருநாவுக்கரசு மரணம்... ஜெ. வின் முதலாவது ஆட்சியில் அமைச்சராக இருந்தவர்!
சென்னை: முன்னாள் அமைச்சர் அழகு திருநாவுக்கரசு சென்னையில் இன்று மாலை மரணமடைந்தார்.
திமுக விவசாய தொழிலாளர் அணி செயலாளராக இருந்து வந்தார் அழகு திருநாவுக்கரசு. ஆனால் இவர் முன்பு அதிமுகவில் இருந்தவர் ஆவார்.
திருநாவுக்கரசு உடல் நலக்குறைவு காரணமாக சென்னையில் காலமானார். இவர், கடந்த 1991ம் ஆண்டு முதல் 1996ம் ஆண்டு வரையிலான ஜெயலலிதாவின் முதலாவது ஆட்சிக்காலத்தின்போது உள்ளாட்சித்துறை அமைச்சராக இருந்தவர்.
சென்னையில் நேரு ஸ்டேடியம் கட்டியதில் முக்கிய பங்கு வகித்தவர். மேலும் திமுக ஆட்சிக்காலத்தில் ஜெயலலிதாவுடன் சேர்த்து இவர் மீதும் வழக்குத் தொடரப்பட்டது. அதில் முக்கியமானது ஜெயலலிதாவுக்கு ரூ. 2 கோடி அளவிலான காசோலைகள் வெளிநாட்டிலிருந்து வந்தது தொடர்பானதாகும்.
இந்த வழக்கில் ஜெயலலிதா தவிர செங்கோட்டையன், அழகு திருநாவுக்கரசு ஆகியோரும் சேர்க்கப்பட்டனர். பின்னர் இந்த வழக்கிலிருந்து அனைவரும் விடுதலையாகி விட்டனர்.
திருநாவுக்கரசின் உடல், அவரது சொந்த ஊரான திருவாரூர் மாவட்டம், எடமேலையூருக்கு எடுத்துச் செல்லப்படுகிறது.
எம்.ஜி.ஆர். அதிமுகவை தொடங்கியபோது அதில் இணைந்த அழகு திருநாவுக்கரசு தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம் மாவட்டங்களை உள்ளடக்கிய ஒருங்கிணைந்த தஞ்சை மாவட்ட அதிமுக செயலாளராகவும், உள்ளாட்சித் துறை அமைச்சராகவும் பணியாற்றிவர்.
கடந்த 2010ம் ஆண்டு இவர் திமுக தலைவர் கருணாநிதி முன்னிலையில் திமுகவில் இணைந்தார்.