நள்ளிரவில் 2-வது மனைவியை சுட்டுக் கொல்ல முயன்ற மாஜி தி.மு.க. எம்.எல்.ஏ.... சென்னையில் பரபரப்பு
சென்னை: 2-வது மனைவியை துப்பாக்கியால் சுட்டு கொலை செய்ய முன்னாள் எம்.எல்.ஏ. அசோகன் முயற்சித்த சம்பவம் சென்னையில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பாக அசோகன் எந்த நேரத்திலும் கைது செய்யப்படலாம் என போலீசார் தெரிவித்துள்ளனர்.
திருவாரூர் தொகுதி முன்னாள் எம்.எல்.ஏ. அசோகன் தி.மு.க.வில் இருந்து விலகி தற்போது அ.தி.மு.க.வில் இருக்கிறார். 2-வது மனைவி ஹேமாவுடன் சென்னை பட்டினப்பாக்கத்தில் வசித்து வருகிறார். இவர்களுக்கு 16 வயதில் ஒரு மகளும், 10 வயதில் ஒரு மகனும் உள்ளனர். கடந்த 2 நாட்களுக்கு முன் ஹேமா நள்ளிரவில் பட்டினப்பாக்கம் போலீசில் ஓடிவந்து ஒரு புகார் கொடுத்தார்.
அதில் தமக்கும் கணவர் அசோகனுக்கும் இடையே தகராறு ஏற்பட்டதாகவும் அப்போது தம்மை அசோகர் 2 முறை கைத்துப்பாக்கியால் சுட்டதாகவும் ஹேமா தெரிவித்திருந்தார். இது தொடர்பாக அசோகன் மற்றும் அவரது மகனிடம் போலீசார் விசாரணை நடத்தினர்.
இந்த விசாரணையின் முடிவில் 2-வது மனைவி ஹேமா மீது அசோகன் 2 முறை துப்பாக்கியால் சுட்டதாகவும் இதில் அவர் உயிர் தப்பியதாகவும் தெரியவந்தது.
அத்துடன் அசோகன் வீட்டில் துப்பாக்கிச் சூட்டு சப்தம் கேட்டதை அப்பகுதி குடியிருப்புவாசிகளும் உறுதி செய்தனர். இதனைத் தொடர்ந்து அசோகன் மீது கொலைமுயற்சி வழக்கை பட்டினப்பாக்கம் போலீசார் நேற்று பதிவு செய்தனர்.
அவரது கைத்துப்பாக்கியையும் போலீசார் பறிமுதல் செய்துள்ளனர். இதனால் அசோகன் எந்த நேரத்திலும் கைது செய்யப்படக் கூடும் என கூறப்படுகிறது.