டாக்டரைப் பார்க்க வந்த இடத்தில் தகராறு.. நர்ஸ் கன்னத்தில் “பளார்” - மதுரையில் மாஜி ராணுவ வீரர் கைது
மதுரை: மதுரையில் அரசு மருத்துவமனையில் மருத்துவரை பார்க்க விடக் கோரி செவிலியை அறைந்த முன்னாள் ராணுவ வீரர் ஒருவர் போலீசாரால் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.
மதுரை மாவட்டம் பேரையூர் அருகே உள்ள தும்மநாயக்கன்பட்டியைச் சேர்ந்தவர் ஈஸ்வரன். அவரது மனைவி முத்துலட்சுமி. சாப்டூரில் உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் நர்சாக வேலைபார்த்து வருகிறார்.
இவர் பணியில் இருந்த போது அதே ஊரைச் சேர்ந்த முன்னாள் ராணுவவீரர் செல்வராஜ் என்பவர் அங்கு வந்து மருத்துவரை பார்க்க வேண்டும் என்று கூறியுள்ளார். அதற்கு முத்துலட்சுமி ஏதோ கூறியிருப்பார் போல. அப்போது திடீரென்று கோபமடைந்த அவர் நர்ஸ் முத்துலட்சுமியை கன்னத்தில் அறைந்து ஆபாச வார்த்தைகளால் பேசியதாக கூறப்படுகிறது.
மேலும், அப்பெண்ணை அரசு பணியை செய்யவிடாமல் தடுத்ததாகவும் தெரிகிறது. இதுகுறித்து சாப்டூர் போலீசில் முத்துலட்சுமி புகார் தெரிவித்தார். இதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து செல்வராஜை கைது செய்து கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பினை ஏற்படுத்தியுள்ளது.