400 அடி செல்போன் டவரில் ஏறி மிரட்டல் விடுத்த முன்னாள் ராணுவ வீரர்
கோவில்பட்டி: கோவில்பட்டியில் 400 அடி உயர டவரில் ஏறி மிரட்டல் விடுத்த முன்னாள் ராணுவ வீரரால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
கோவில்பட்டி சங்கரலிங்கபுரத்தை சேர்ந்தவர் முத்து. இவர் உத்தராஞ்சல் மாநிலத்தில் ராணுவ வீரராக பணியாற்றி வந்தார். இவர் கடந்த 30.6.2015 அன்று பணி நீக்கம் செய்யப்பட்டார். முத்து தனக்கு வழங்க வேண்டிய பண பலன்களை உடனடியாக வழங்கக் கோரி கடந்த 3 மாதங்களுக்கு முன்பு சரங்கரலிங்கபுரத்தில் உண்ணாவிரதம் மேற்கொண்டார். அப்போது தாசில்தார் அவருடன் பேச்சுவார்த்தை நடத்தி உண்ணாவிரதத்தை வாபஸ் பெற வைத்தார்.

இந்த நிலையில் இன்று காலை கோவில்பட்டி டி.எஸ்.பி அலுவலகம் அருகில் உள்ள 400 அடி உயர போலீஸ் வயர்லெஸ் டவரில் முத்து ஏறி மிரட்டல் விடுத்தார். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. பின்னர் டவரின் மேல் இருந்து ஒரு கடிதத்தை அவர் கீ ழே போட்டார். அதில், "நான் 17 ஆண்டுகளாக இந்திய ராணுவத்தில் பணியாற்றினேன். கடந்த 2014 ஆம் ஆண்டு உயர் அதிகாரிகள் ஊழல் மற்றும் முறைகேடுகளை கண்டித்து டெல்லியில் செல்போன் டவரில் ஏறி 5 நாட்கள் உண்ணாவிரதம் இருந்தேன். இதனால் என்னை மனநலம் பாதிக்கப்பட்டவன் என கூறி ராணுவத்தில் இருந்து பணி நீக்கம் செய்தனர்.
எனக்கு கிடைக்க வேண்டிய பண பலன்களை வழங்க மறுத்து வருகின்றனர். எனது பிரச்சினை குறித்து தூத்துக்குடி நாடாளுமன்ற உறுப்பினர் நாடாளுமன்றத்தில் பேசும்வரை உண்ணாவிரதம் இருப்பேன்" என எழுதியுள்ளார். இதுகுறித்து தகவல் அறிந்த கோவில்பட்டி உதவி காவல்துறை அதிகாரி முரளிரம்பா அங்கு வந்து முத்துவுடன் பேச்சுவார்த்தை மேற்கொண்டார். தீயணைப்பு துறையினர் மற்றும் போலீசார் அங்கு வந்து அவரை மீட்கும் பணியில் ஈடுபட்டனர்.












Click it and Unblock the Notifications