தொடரும் கனமழை: சென்னை அண்ணா பல்கலை, அண்ணாமலை, புதுச்சேரி, திருவள்ளூர் பல்கலைக்கழக தேர்வுகள் ரத்து !
சென்னை: தொடர்ந்து பெய்து வரும் கனமழை காரணமாக சென்னை அண்ணா பல்கலை, சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழகம், புதுச்சேரி, வேலூர் பல்கலைக்கழகங்களின் தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டுள்ளன. இதற்கான அறிவிப்பை அந்தந்த பல்கலை நிர்வாகங்கள் அறிவித்துள்ளன.
தமிழகத்தில் தற்போது வடகிழக்கு பருவ மழை தீவிரமடைந்துள்ளது. இதனால் சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், விழுப்புரம், புதுச்சேரி உள்ளிட்ட பல பகுதிகளில் விடாது விரட்டி விரட்டி கனமழை பெய்து வருகிறது. இதன் காரணமாக பள்ளி, கல்லூரிகளுக்கு தொடர்ந்து விடுமுறை விடப்பட்டு வருகிறது.

அண்ணா பல்கலை கழகம்:
அண்ணா பல்கலைக்கழகம் மற்றும் அதன் உறுப்புக் கல்லூரிகளில் இன்று மற்றும் நாளை நடைபெற இருந்த தேர்வுகள் தேதி குறிப்பிடாமல் ஒத்தி வைக்கப்பட்டுள்ளன. தேர்வுகள் நடைபெறும் தேதி குறித்த அறிவிப்பு பல்கலைக்கழக இணையதளத்தில் பின்னர் வெளியிடப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
அண்ணாமலை பல்கலை கழகம்:
இந்நிலையில்,கனமழையின் காரணமாக அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் 02.12.2015 மற்றும் 03.12.2015 ஆகிய நாட்களில் நடைபெற இருந்த அனைத்து தேர்வுகளும் ஒத்தி வைக்கப்படுகின்றன. தேர்வுகள் நடைபெறும் நாள் பின்னர் அறிவிக்கப்படும் என்று பல்கலைக்கழக பதிவாளர் முனைவர் க.ஆறுமுகம் அறிவித்துள்ளார்.
புதுச்சேரி, திருவள்ளூர் பல்கலை கழகம்:
புதுச்சேரி மத்திய பல்கலை கழகத்தில் நடைபெறவிருந்த தேர்வுகள் காலவரையின்றி ஒத்தி வைக்கப்பட்டுள்ளது எனவும் தேர்வு நடைபெறும் தேதி பின்னர் அறிவிக்கப்படும் என பல்கலை கழக நிர்வாகம் அறிவித்துள்ளது. மேலும் வேலூர் திருவள்ளூர் பல்கலைக்கழக தேர்வுகளும் ஒத்திவைக்கப்பட்டுள்ளன.
மாநில கல்லூரி தேர்வுகள் ஒத்திவைப்பு
சென்னை மாநில கல்லூரியில் டிசம்பர் 2 மற்றும் 3 ஆம் தேதி நடக்க இருந்த தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டுள்ளன. இந்த தேர்வுகள் டிசம்பர் 17 மற்றும் 18ஆம் தேதிகளில் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications