வேலூர் அருகே கல்லூரியில் விழுந்து வெடித்தது விண்கல்தான்... இஸ்ரோ விஞ்ஞானிகள்
வேலூர்: வேலூர் நாட்டறம்பள்ளி அருகே தனியார் பொறியியல் கல்லூரியில் வெடித்துச் சிதறியது விண்கல் தான் என்று இஸ்ரோ விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.
நாட்டறம்பள்ளி அருகில் உள்ள தனியார் பொறியியல் கல்லூரி வளாகத்தில் சனிக்கிழமை பிற்பகல் வானத்திலிருந்து வெண்புகையோடு அதிவேகமாக வந்த மர்மப்பொருள் அங்கிருந்த குடிநீர் தொட்டி அருகே விழுந்து பயங்கர சப்தத்துடன் வெடித்துச் சிதறியது.

இதில் கல்லூரி கட்டடத்தில் இருந்த கண்ணாடிகள், 10-க்கும் மேற்பட்ட பேருந்துகள், வாகனங்களின் கண்ணாடிகள் உடைந்து சிதறின. வெடித்த இடத்தில் சுமார் 3 அடி அகலத்துக்கு பள்ளம் ஏற்பட்டு அதிலிருந்து சிறிது நேரம் புகை வந்தது.
இந்த மர்மப்பொருள் வெடித்துச் சிதறியதில் கல்லூரி பேருந்து ஓட்டுநர் காமராஜ் உயிரிழந்தார். மேலும் 3 பேர் காயமடைந்தனர்.
இதுகுறித்து தகவலறிந்த வேலூர் எஸ்.பி. செந்தில்குமாரி சம்பவ இடத்துக்குச் சென்று விசாரணை மேற்கொண்டார். மேலும் சனிக்கிழமை மாலை ஹைதராபாத்திலிருந்து வந்த இஸ்ரோ விஞ்ஞானி பாலமுருகன் தலைமையிலான 4 பேர் அடங்கிய குழுவினர் வெடித்த இடத்திலிருந்து மீட்கப்பட்ட கல்லை சோதனை செய்ததில் அது விண்கல் என்பது முதல்கட்ட ஆய்வில் தெரியவந்தது.
கல்லூரி வளாகத்தில் கிடைத்த விண்கல்லை கைப்பற்றிய போலீசார் அதனை வேலூருக்கு கொண்டு சென்று பாதுகாப்பான இடத்தில் வைத்தனர். மேலும் இதுகுறித்து ஆய்வு செய்யுமாறு பெங்களூரில் உள்ள இந்திய வான் இயற்பியல் மையத்துக்கு தகவல் தெரிவித்துள்ளனர்.












Click it and Unblock the Notifications