அதிதீவிர புயலாக மிரட்டும் ’வர்தா’... தமிழகத்தில் கன மழைக்கு வாய்ப்பு
வர்தா புயல் சென்னை - ஆந்திர மாநிலம் ஓங்கோல் இடையே நாளை மாலை கரையைக் கடக்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
சென்னை: தென்கிழக்கு வங்ககடலில் நிலைகொண்டுள்ள வர்தா புயலானது அதிதீவிர புயலாக மாறியுள்ளது என்று சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. இந்த புயல் சென்னை - ஆந்திர மாநிலம் ஓங்கோல் இடையே நாளை மாலை கரையைக் கடக்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தென்கிழக்கு வங்ககடலில் நிலைகொண்டுள்ள வர்தா புயலானது நேற்று மாலை 5.30 மணியளவில் அதிதீவிர புயலாக மாறியுள்ளது. தற்போது நெல்லூரில் இருந்து 710 கி.மீ தொலைவில் மையம் கொண்டுள்ள வர்தா புயல் நாளை சென்னை-ஓங்கோல் இடையே கரையை கடக்கும் என்று எதிர்பார்க்கபடுகிறது. வர்தா புயல் காரணமாக தெற்கு கடலோர ஆந்திரா, வடகடலோர தமிழகத்தில் கன மழைக்கு வாய்ப்பு உள்ளது.
தென்கடலோர ஆந்திரா மற்றும் வட கடலோர தமிழகப் பகுதிகளில் மீனவர்கள் மீன் பிடிக்க செல்லவேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. இந்த பகுதிகளில் மீன் பிடித்து கொண்டிருக்கு மீனவர்கள் உடனடியாக கரைக்கு திரும்ப அறிவுறுத்தப்பட்டுள்ளது.
புயல் கரையை கடக்கும் போது சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், திருவண்ணாமலை ஆகிய மாவட்டங்களில் கன மழை பெய்வதற்கு வாய்ப்பு உள்ளது என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.