'மூட்டை கட்டிய வாசன் கோஷ்டி' - தமிழக காங்கிரஸில் இனி நம்பர் ஒன் கோஷ்டி யாரு?
சென்னை: தமிழக காங்கிரஸில் ஆதிக்கம் செலுத்தி வந்த வாசன் கோஷ்டி வெளியேறிவிட்டதால் தற்போதைய நிலையில் சிதம்பரம் கோஷ்டியின் கை ஓங்கி உள்ளது. இருப்பினும் தங்கபாலு, இளங்கோவன், திருநாவுக்கரசர் கோஷ்டிகள் இனி தலையெடுக்கலாம் என்றும் கூறப்படுகிறது.
தமிழகத்தில் காங்கிரஸ் கட்சி தோன்றிய காலம் தொட்டே கோஷ்டி அரசியல் என்பதும் பயணித்துக் கொண்டே வருகிறது. ராஜாஜி கோஷ்டி, சத்தியமூர்த்தி கோஷ்டி, சி.சுப்பிரமணியன் கோஷ்டி, காமராஜர் கோஷ்டி, கண்ணதாசன் கோஷ்டி, சம்பத் கோஷ்டி, சிவாஜி கோஷ்டி, நெடுமாறன் கோஷ்டி, மூப்பனார் கோஷ்டி ப. ராமச்சந்திரன் கோஷ்டி, வாழப்பாடி கோஷ்டி. பின்னர் வாசன் கோஷ்டி, தங்கபாலு கோஷ்டி, சிதம்பரம் கோஷ்டி, திருநாவுக்கரசர் கோஷ்டி என இந்த பயணம் இன்று வரை நீடித்த ஒன்றாகத்தான் இருக்கிறது.

அன்று வாழப்பாடி- மூப்பனார் கோஷ்டி
1980களின் மத்தியில் இருந்து தமிழக காங்கிரஸ்லில் ஜி.கே. மூப்பனார், வாழப்பாடி ராமமூர்த்தி என்ற இருபெருந்தலைவர்களின் கோஷ்டிகளே பிரதானமாக இருந்தது. 1992ல் வாழப்பாடி காங்கிரஸில் இருந்து விலகி திவாரி கட்சி தொடங்கினார். 1996-ல் மூப்பனார் காங்கிரஸில் இருந்து விலகி தமிழ் மாநில காங்கிரஸை தொடங்கினார்.

சரித்திரம் படைத்த காங்கிரஸ் கோஷ்டிகள்
இதன் பின்னர் தமிழக காங்கிரஸில் தடி எடுத்தவர்கள் எல்லாம் தண்டல்காரர்கள் என்ற நிலையில் ஆளுக்கொரு கோஷ்டியை உருவாக்கி "சரித்திரப் புகழ்" படைத்தனர். 2001ஆம் ஆண்டு தமிழ் மாநில காங்கிரஸ் மீண்டும் காங்கிரஸில் கரைந்த பின்னர் அக்கட்சியில் கோஷ்டி பூசல் உச்சத்தை எட்டியது.

உச்சகட்டமாக கோஷ்டிக்கு கோட்டா சிஸ்டம்
கட்சியின் நிர்வாக அமைப்பே கோஷ்டிக்கு இத்தனை கோட்டா என்ற சிஸ்டத்துக்கு தள்ளப்பட்டது பெருங்கொடுமையாகிப் போனது. அதாவது வாசன் கோஷ்டிக்கு இத்தனை; சிதம்பரம் கோஷ்டிக்கு இத்தனை; தங்கபாலு அணிக்கு இத்தனை, ஜெயந்தி குரூப்புக்கு இத்தனை இடம் என இருக்கிற தலைவர்கள் அனைவரையும் திருப்திபடுத்த நிர்வாகிகள் முதல் வேட்பாளர்கள் வரை கோட்டா சிஸ்டம் அறிமுகப்படுத்தி மற்றொரு சரித்திரம் படைத்தது காங்கிரஸ்.

ஒரு கட்சி- 10 கோஷ்டி கானங்கள்
இதனால் தமிழ்நாடு காங்கிரஸ் கட்சி என்பது ஒற்றைப் பெயரில் இருந்தாலும் ஒன்பது பத்து காங்கிரஸ் கிளைகளாகாத்தான் இயங்கி வந்தன. இதில் வாசன் கோஷ்டிக்கும் சிதம்பரம் கோஷ்டிக்கும் பெரும் நிழல் யுத்தம் நடைபெற்று வந்தது.

ஓங்கிய கையுடன் வாசன் கோஷ்டி
வாசன் கோஷ்டிதான் அதிக ஆதரவாளர்களைக் கொண்டதால் காங்கிரஸ் மேலிடம் பம்மிக் கொண்டு இருந்தது. ஆனால் வாசன் கோஷ்டியை டம்மியாக்கிவிட பகீரத முயற்சிகளை சிதம்பரம் கோஷ்டி மேற்கொண்டு வந்தது.

நம்பர் ஒன் இடத்துக்கு முன்னேறிய சிதம்பரம் கோஷ்டி
தற்போது வாசன் கோஷ்டியே காங்கிரஸ் கட்சியைவிட்டே வெளியேறிட நம்பர் ஒன் கோஷ்டியாக சிதம்பரம் அணி உருவெடுத்துள்ளது.

வருது புதிய கோஷ்டிகள்
இனி பஞ்சாயத்து எல்லாம் சிதம்பரம் கோஷ்டிக்கும் எஞ்சியிருக்கும் அத்தனை தலைவர்களின் கோஷ்டிக்கும்தான்... அதே நேரத்தில் ப. சிதம்பரம் கோஷ்டியுடன் மோதக் கூடிய வலிமை தங்கபாலு அல்லது இளங்கோவன் அணிகளில் ஒன்றுக்குத்தான் இருக்கவும் கூடும் என்பது காங்கிரசார் கணக்கு.












Click it and Unblock the Notifications