மாயமான ஏஎன் - 32 விமானத்தில் சென்றவரின் செல்போன் செயல்படுகிறது?
சென்னை: சென்னை தாம்பரத்தில் இருந்து அந்தமானுக்கு சென்ற போது மாயமான ராணுவ விமானத்தில் சென்ற ஒருவரின் செல்போன் எண் செயல்படுவதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
சென்னை தாம்பரத்தில் உள்ள ராணுவத்தளத்திலிருந்து விமானப்படைக்கு சொந்தமான ஏஎன் - 32 விமானம் கடந்த 22 ஆம் தேதி அந்தமானுக்கு சென்ற போது மாயமானது.

அந்த விமானத்தில் 29 பேர் சென்றனர். விமானத்தில் சென்றவர்களின் நிலை என்னவானது என்பது இன்னமும் தெரியாமல் உள்ளது. அந்த விமானத்தில் பயணம் செய்த 17 பேர் விமானப்படையைச் சேர்ந்தவர்கள்.
பி.பட்சாரா (கேப்டன்), பி.கே. நந்தால் (துணை கேப்டன்), குணால் தர்பிட்டி, ஆர்.ரஞ்சன், ஜி.சவுத்ரி, கபில், தீபிகா, அகிலேஷ், பிபின் குமார், எல்.கே.திரிபாதி, ரகுவீர் வர்மா, நவ்ஜோத் சிங், ரவிதேவ் சிங், பி.சந்த், முகேஷ் தாக்கூர், சி.எஸ்.யாதவ், எக்நாதாக் ஆகியோர் விமானப்படையைச் சேர்ந்தவர்கள்.
விமல், கின்ஜாஷியாம் இருவரும் ராணுவத்தை சேர்ந்தவர்கள். பிரசாத் பாபு, பூர்ணசந்திரா, சரண் மகாராணா, சின்னாராவ், சீனிவாசராவ். சாம்பமூர்த்தி, பூபேந்திரசிங், நாகேந்திரராவ், சாஷீவ்குமார் ஆகிய 9 பேர் கடற்படை ஊழியர்கள். 29 பேருடன் மாயமான விமானத்தை தேடும் பணி இன்று 9வது நாளை எட்டியுள்ளது.
இந்நிலையில் விமானத்தில் சென்ற 29 பேரில் ஒருவரின் செல்போன் எண் செயல்படுவதாக தகவல் வெளியாகியுள்ளது. 29 பேரில் ஒருவரான பெங்களூருவைச் சேர்ந்த ரகுவீர் வர்மா என்பவரின் குடும்பத்தினர் தொடர்ந்து அவரது செல்போன் எண்ணை தொடர்பு கொள்ள முயற்சித்துள்ளனர்.
இந்நிலையில் அவரது எண்ணுக்கு இன்று காலையில் அழைப்பு சென்றதாக அவர்கள் தெரிவித்துள்ளனர். அவருடைய வாட்ஸ்ஆப் கடந்த 26 ஆம் தேதி பயன்படுத்தப்பட்டுள்ளதாகவும் அவர்கள் கூறியுள்ளனர்.
மாயமான விமானத்தில் பயணித்த நபரின் செல்போன் செயல்படுவதாக கூறப்படுகிறதால் அந்த விமானத்தில் பயணித்தோர் உயிருடன் இருக்கலாம் என நம்பப்படுகிறது.












Click it and Unblock the Notifications