நெல்லை கலெக்டர் அலுவலகத்தில்.. கந்து வட்டி கொடுமையால் 4 பேர் தீக்குளிப்பு.. 3 பேர் மரணம்!
கந்துவட்டி கொடுமையால் குடும்பத்தோடு தீக்குளித்த 4 பேரில் 3 பேர் உயிரிழந்துள்ளனர். இசக்சி முத்து பலத்த காயங்களுடன் உயிருக்கு போராடி வருகிறார்.
Recommended Video

திருநெல்வேலி: கந்து வட்டி பிரச்சினை காரணமாக தம்பதியர், தங்களின் இரு குழந்தைகளுடன் தீ குளித்து தற்கொலைக்கு முயன்றனர். தீவிர சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிசிச்சை பலனின்றி சுப்புலட்சுமி உயிரிழந்தார். இரண்டு குழந்தைகளும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர்.
தீ குளித்த தம்பதியர் தென்காசியை அடுத்த காசி தர்மத்தை சேர்ந்தவராவர். காசி தர்மத்தைச் சேர்ந்த இசக்கி முத்து சுப்புலட்சுமி தம்பதியர் தங்களின் இரண்டு குழந்தைகளுடன் இன்று நெல்லை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு வந்தனர்.

தங்களின் கைகளில் வைத்திருந்த மண்ணெண்ணையை எடுத்து உடம்பில் ஊற்றிக்கொண்டு தீ வைத்தனர். இதனைக்கண்டு அங்கிருந்தவர்கள் அதிர்ச்சியடைந்தனர்.
தீ குளித்த 4 பேரும் படுகாயமடைந்தனர். காயமடைந்தவர்கள் சிகிச்சைக்காக பாளையங்கோட்டை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

முதற்கட்ட விசாரணையில் கந்து வட்டிக்கு பணம் கொடுத்தவர்கள் காவல்துறையினர் உதவியுடன் மிரட்டல் விடுத்ததாகவும், இதன்காரணமாகவே 4 பேரும் தற்கொலைக்கு முயற்சி செய்ததாகவும் தகவல் வெளியானது.
100 சதவிகித காயங்களுடன் சிகிச்சை பெற்று வந்த நிலையில் சுப்புலட்சுமி சிகிச்சை பலனின்றி முதலில் உயிரிழந்தார். இதனைத் தொடர்ந்து குழந்தைகள் குழந்தைகள் மதி சரண்யா,அட்சயா பரணி ஆகியோர் சிகிச்சை பலனின்றி மரணமடைந்தனர்.

ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் தீக்குளித்து தற்கொலைக்கு முயற்சி செய்த சம்பவம் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. 1 லட்சத்தில் 40 ஆயிரம் ரூபாய்க்கு 2 லட்சத்து 50 ஆயிரம் வரை வட்டி கட்டி விட்டதாகவும் தீ குளித்தவர்களின் உறவினர்கள் கூறியுள்ளனர்.
வட்டிக்கு பணம் கொடுப்பவர் மிரட்டியதால்தான் இதுபோன்ற தற்கொலை முயற்சி செய்ததாகவும் கூறினர். மாவட்ட ஆட்சித்தலைவரிடம் மனு அளித்திருப்பதாகவும், கந்து வட்டி பிரச்சினைக்கு காவல்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே பொதுமக்களின் கோரிக்கையாகும்.













Click it and Unblock the Notifications