கமிஷனர் அலுவலகத்தில் சரமாரியாக குவியும் புகார்கள் - பிறகு எதற்கு காவல் நிலையங்கள்...?
சென்னை: சென்னையில் போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் ஒரு கணவன் மீது மனைவியும், தன்னுடைய மனைவி மீது கணவர் ஒருவரும் திடுக்கிடும் புகார் மனுக்கள் கொடுத்துள்ளனர்.
புகார் கொடுத்துள்ள இளம்பெண்ணின் பெயர் கீதா. அவரது மனுவில், "நான் சென்னை வேளச்சேரியில் வசிக்கிறேன். எனது முதல் கணவரை சமரச உடன்படிக்கை அடிப்படையில் பிரிந்து வாழ்கிறேன்.
அவருக்கு பிறந்த குழந்தைகள் என்னுடன் உள்ளனர். இந்த நிலையில் சென்னை தியாகராயநகரில் திருமண தகவல் மையம் நடத்தி வருபவருடன் எனக்கு பழக்கம் ஏற்பட்டது.
அவரை நான் 2வது திருமணம் செய்துகொண்டேன். அவரது தொழில் அபிவிருத்திக்காக ரூபாய் 10 லட்சம் பணம் கொடுத்தேன். ஆனால் எனது 2வது கணவர் ஏற்கனவே திருமணமாகி ஒரு குழந்தைக்கு தந்தை என்று தெரிந்து கடும் அதிர்ச்சி அடைந்தேன்.
பாலில் தூக்க மாத்திரை கலந்து கொடுத்து என்னை அவர் கொலை செய்ய பார்த்தார். அவரது முதல் மனைவிதான் என்னை காப்பாற்றினார். தற்போது அவர், என்னை தொடர்ந்து கொலை செய்ய துடிக்கிறார்.
அவர் நடத்தும் திருமண தகவல் மையத்தில் மாப்பிள்ளை கேட்டு பதிவு செய்யும் பல பெண்களின் வாழ்க்கையோடு அவர் விளையாடி இருப்பதாக அவரே சொல்கிறார்.
அவர் மீது தேனாம்பேட்டை அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தால், எனது புகாரையே வாங்க மறுத்து விட்டனர். ஆனால் அவர் கொடுத்த புகார் மனுவை வாங்கிக்கொண்டு என் மீது விசாரணை நடத்துகிறார்கள்.
என் உயிரோடும், வாழ்க்கையோடும் விளையாடும் என் கணவர் மீது தக்க நடவடிக்கை எடுத்து என்னை காப்பாற்றும்படி வேண்டுகிறேன்" என்று தெரிவித்துள்ளார்.
இதேபோல் சென்னை சிந்தாதிரிப்பேட்டையில் வசிக்கும் வாலிபர் தீபன்ராஜ் தனது மனைவி மீது திடுக்கிடும் புகார் மனுவை கமிஷனர் அலுவலகத்தில் நேற்று கொடுத்தார். அந்த மனுவில், "எனது மனைவி ஒரு போலீஸ் சப் இன்ஸ்பெக்டரின் மகனை 2வதாக மணந்து கொண்டுவிட்டாள்.
அவள் என்னை கொலை செய்யப்போவதாக மிரட்டுகிறாள். இதுபற்றி புகார் கொடுத்தால் சிந்தாதிரிப்பேட்டை போலீசார் நடவடிக்கை எடுக்கவில்லை. குறிப்பிட்ட சப்-இன்ஸ்பெக்டரும் என்னை மிரட்டுகிறார். எனவே எனக்கு உரிய பாதுகாப்பு வழங்க வேண்டும்" என்று தெரிவித்துள்ளார்.
பொதுமக்கள் போலீஸ் நிலையங்களில் கொடுக்கும் மனுக்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சென்னை ஹைகோர்ட் உத்தரவிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. ஆனால் போலீஸ் நிலையங்களில் புகார்கள் வாங்கப்படுவதே இல்லை என்று மக்கள் குமுறுகிறாரக்ள். இதனால்தான் சாதாரண புகார்களுக்குக் கூட கமிஷனர் அலுவலகத்தை நோக்கி படையெடுக்கும் நிலைக்கு மக்கள் தள்ளப்படுகிறார்கள்.