2015 ஆம் ஆண்டில் காலம் கடந்தவர்களும் , காலத்தை வென்றவர்களும்!
சென்னை: 2015 ஆம் ஆண்டு...கிட்டத்தட்ட முழுவதுமாக கடந்து போகும் கடைசி தருணங்களில் இருக்கின்றது.
இந்த கடந்து போகும் வருடத்தில் நாம் அறிவியல், பாதுகாப்பு, மருத்துவம் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் வளர்ச்சி அடைந்திருக்கின்றோம்.
ஆனால், அதே சமயத்தில் பல முக்கிய பிரமுகர்களையும், பிரபலங்களையும் ஒரு சேர இழந்துள்ளோம். ஒவ்வொரு துறையில் சகாப்தமாக விளங்கிய பிரபலங்களின் இழப்பும் இந்த 2015ஆம் வருடத்தினை சோகமாக்கிச் சென்றிருப்பது குறிப்பிடத்தக்கது.
அப்படிப்பட்ட 11 பிரபலங்களின் மறைவும், அதனால் ஏற்பட்ட இழப்புகளும், சோகமும் இங்கு பட்டியலிடப்பட்டுள்ளது.

மக்கள் ஜனாதிபதி அப்துல்கலாம்:
2015, ஜூலை 27 ஆம் தேதியன்று மக்களால் பெருமையாக "மக்கள் ஜனாதிபதி" என்று அழைக்கப்படும் ஏ.பி.ஜே அப்துல் கலாம் அவர்கள், ஐ.ஐ.எம் ஷில்லாங்கில் மாணவர்களுக்கு நடுவே உரையாற்றும் போதே மயங்கி விழுந்தார். உடனடியாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டும், அங்கி சிகிச்சை பலனின்றி மாரடைப்பால் காலமானார். தமிழகத்தின் கடைக்கோடி ராமேஸ்வரத்தில் பிறந்து சிறந்த விஞ்ஞானியாக திகழ்ந்த கலாம் அவர்கள் இந்தியாவின் 11வது குடியரசுத் தலைவராய் 2002 முதல் 2007 வரை பதவி வகித்தார். அவருடைய இறுதி ஊர்வலத்தில் லட்சக்கணக்கான மக்களும், அரசியல் தலைவர்களும் பாரபட்சமின்றி கலந்து கொண்டனர்.

ஆச்சி மனோரமா:
இந்திய சினிமா உலகில் இன்று வரை சிலரை தாராளமாக கைகாட்டி அதன் தூண்கள் என்று சொல்லலாம். அப்படிப்பட்டவர்தான் தமிழ் சினிமா உலகிற்கு சொந்தமான ஆச்சி என்று அன்போடு அழைக்கப்படும் நடிகை மனோரமா. அக்டோபர் 10 ஆம் தேதியன்று தனது 78 வயதில் மனோரமா அவர்கள் மூச்சுத்திணறலால் உயிரிழந்தார். உலக திரையுலக வரலாற்றில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட படங்களில் நடித்து புகழ்பெற்ற ஆச்சி மனோராமா இந்த சாதனைக்காக கின்னஸ் சாதனை புத்தகத்திலும் இடம் பெற்றுள்ளார். கலைத்துறையில் ஆற்றிய சேவைக்காக இந்தியாவின் உயரிய விருதான பத்ம ஸ்ரீ உள்ளிட்ட விருதுகளையும் பெற்று கவுரவிக்கப்பட்டுள்ளார்.

மெல்லிசை மன்னர் எம்.எஸ்.விஸ்வநாதன்:
தமிழ் சினிமாவில் மெல்லிசை பாடல்களுக்கு பெயர் போன இசையமைப்பாளர் எம்.எஸ்.விஸ்வநாதன் அவர்கள் இந்த வருடம் ஜூலை 14 ஆம் தேதியன்று காலமானார். தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி என 1,200க்கும் மேற்பட்ட படங்களுக்கு இசை அமைத்துள்ளார் மெல்லிசை மன்னர் எம்.எஸ்.விஸ்வநாதன். "புதிய பறவை" படத்தில் வரும் எங்கே நிம்மதி பாடலுக்கு அதிகபட்சம் 300 இசைக் கருவிகளையும், "பாகப்பிரிவினை" படத்தில் வரும் தாழையாம் பூ முடிச்சு பாடலுக்கு 3 இசைக் கருவிகளையும் பயன்படுத்தியவர் என்பது குறிப்பிடத்தக்கது.

சுபாஷ் கெய்சிங்:
இந்திய கூர்க்கா முன்னணியின் நிறுவனரான சுபாஷ் கெய்சிங் ஜனவரி 30ஆம் தேதியன்று, டெல்லி மருத்துவமனை ஒன்றில் காலமானார். மேற்கு வங்காள அரசியலில் முக்கிய பங்கு வகித்த இவர், "கூர்க்கா நிலப் பிரச்சினை" முன்னால் வரவும், அதற்கான தீர்வு நடவடிக்கைகளை முன்னெடுத்தவரும் ஆவார். கூர்க்கா ரைபிள் வீரராக இருந்த இவர் 1980களில் இடதுசாரிகளுக்கு பெரும் சவாலாக அமைந்தார்.

சுவ்ரா முகர்ஜி:
இந்தியக் குடியரசுத் தலைவரான பிரணாப் முகர்ஜியின் மனைவியும், முதல் குடிமகளுமான சுவ்ரா முகர்ஜி ஆகஸ்ட் 18 ஆம் தேதியன்று டெல்லியில் உடல்நலக் குறைவால் காலமானார். கடந்த 1957 ஆம் ஆண்டு பிரணாப் முகர்ஜியை திருமணம் செய்து கொண்ட சுவ்ரா முகர்ஜி, சிறந்த பாடகியாகத் திகழ்ந்தார். இது தவிர நடனத்திலும் ஆர்வம் கொண்ட சுவ்ரா இரண்டு புத்தகங்களையும் எழுதியுள்ளார்.

ஆதேஷ் ஸ்ரீவஸ்தவா:
பாலிவுட்டின் பிரபல இசையமைப்பாளரான ஆதேஷ் ஸ்ரீவஸ்தவா புற்று நோயால் அவதிப்பட்டு வந்தார். இந்நிலையில் அவர் செப்டம்பர் 5 ஆம் தேதியன்று கோகிலாபென் மருத்துவமனையில், மும்பையில் காலமானார். 90களில் பாடகராக அறிமுகமான ஆதேஷ் ஸ்ரீவஸ்தவா, நூற்றுக்கும் மேற்பட்ட இந்தித் திரைப்படங்களுக்கு பின்னணி இசை மற்றும் பாடல்களை இசையமைத்துள்ளார்.

ஜக்மோகன் டால்மியா:
இந்திய கிரிக்கெட் வாரியத் தலைவர் ஜக்மோகன் டால்மியா மாரடைப்பால் கடந்த செப்டம்பர் 21 ஆம் தேதியன்று மரணமடைந்தார். இந்திய கிரிக்கெட் உலகின் ஜாம்பவான் நிர்வா்கியாக, இரும்பு மனிதராக வலம் வந்தவர் டால்மியா. உலக கிரிக்கெட் அரங்கில் நிலவி வந்த வல்லரசு ஆதிக்கத்தை தகர்த்து இந்தியாவின் பக்கமாக உலக கிரிக்கெட்டை திருப்பிக் கொண்டு வந்த பெருமைக்குரியவர் இவர். 2001 முதல் 2005 வரை பிசிசிஐ தலைவராக திகழ்ந்தவர் இவர் என்பது குறிப்பிடத்தக்கது.

ஆர்.கே.லக்ஷ்மண்:
புகழ்பெற்ற கார்ட்டூனிஸ்டான ஆர்.கே.லக்ஷ்மண் இந்தவருடம் ஜனவரி 26ஆம் தேதியன்று உடல்நலக் குறைவால் உயிரிழந்தார். அவர் உருவாக்கிய "திருவாளர் பொதுஜனம்" என்னும் காமன் மேன் கார்ட்டூன் பத்திரிகை உலகில் அழிக்க முடியாத ராஜ முத்திரையாக பதிந்துவிட்டது. பல்வேறு பத்திரிகைகளில் முதன்மை கார்ட்டூனிஸ்டாக பணியாற்றினார். பணியில் ஒழுக்கத்தை மிகவும் கண்டிப்புடன் பின்பற்றினார். 60 ஆண்டுகளுக்கும் மேலான அவரின் பத்திரிகை பணியைப் பாராட்டி மகாசேசே விருது, பத்ம பூஷண், பத்ம விபூஷண் உள்பட பல்வேறு விருதுகள் வழங்கப்பட்டுள்ளன.

கமலா லக்ஷ்மண்:
ஆர்.கே.லக்ஷ்மண் அவர்களின் மனைவியும், குழந்தைகள் கதை எழுத்தாளருமான கமலா லக்ஷ்மணும் இந்த ஆண்டே காலமானார். நவம்பர் 13 ஆம் தேதியன்று உடல்நலக் குறைவால் காலமானார். "தம்மா" என்ற பெயரில் ஒரு குட்டி யானை கதாபாத்திரத்தை உருவாக்கி, குழந்தைகளுக்காக எட்டு கதைகளை இவர் எழுதியிருக்கிறார். எழுபதுகளின் மத்தியில், குழந்தைகளுக்காகப் புத்தகம் எழுதுமாறு இண்டியா புக் ஹவுஸ் நிறுவனம் கேட்டுக் கொண்டதன் அடிப்படையில் பல புத்தகங்களைக் கமலா எழுதியிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

அசோக் சிங்கால்:
கடந்த நவம்பர் 17 ஆம் விஸ்வ இந்து பரிஷத் தலைவர் அசோக் சிங்கால் உடல் நலக் குறைவால் காலமானார். அவருக்கு வயது 89. பனாரஸ் இந்து பல்கலைக்கழகத்தில் 1950 இல் உலோகவியல் பொறியியல் பட்டம் பெற்றவர் இவர். 1942 முதல் ராஷ்டிரிய சுயம்சேவாக் சங்கத்துடன் தொடர்புடையவர். பட்டம் பெற்ற பின்னர் ஆர்.எஸ்.எஸ் முழுநேர பிரச்சாரகராக மாறியவர் இவர் என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications