ஆடு மேய்ச்சா சாப்பாட்டுடன் ரூ.500.. விசிட்டிங் கார்டு அடித்து வேலை கேட்கும் வித்தியாச தொழிலாளி!
ஆடு மேய்க்க சாப்பாட்டுடன் 500 ரூபாய் சம்பளம் கேட்டு தொழிலாளி ஒருவர் விசிட்டிங் கார்டு அடித்து விநியோகம் செய்து வருகிறார்.
விருதுநகர்: நீரின்றி வறண்டு போய் கிடக்கும் விருதுநகர் மாவட்டத்தில் ஆடு மேய்ப்பதற்கு சாப்பாட்டுடன் ரூ. 500 கொடுத்தால் ஆடு மேய்ப்பதாக தொழிலாளி ஒருவர் விசிட்டிங் கார்டு அடித்து வேலை செய்து வருகிறார்.
தமிழகம் முழுவதும் கடந்த 140 ஆண்டுகளில் இல்லாத அளவு ஏற்பட்ட வறட்சியால் விவசாயம் பொய்த்துப் போயுள்ளது. இதே போன்று விவசாயத்தின் உபதொழிலான கால்நடை வளர்ப்பும் விவசாயிகளுக்கு சவால் விடும் தொழிலாக மாறியுள்ளது.

குடிநீரில்லை, கால்நடைகள் உண்ண பச்சை பசேல் செடிகள் இல்லை என்ற கவலைகளுக்கு மத்தியில் ஆடு மேய்க்க ஆளில்லை என்று திண்டாடி வருகிறது வறண்ட மாவட்டமான விருதுநகர். சிவகாசி, உள்ளிட்ட கிராமங்களில் சம்பளம் கொடுத்தாலும் ஆள் கிடைக்கவில்லை என்று விவசாயிகள் கவலை தெரிவிக்கின்றனர்.
காலத்திற்கேற்ப அனைவரும் மாறிக் கொள்ள வேண்டும் என்பதை உணர்த்தும் விதமாக ஆடு மேய்க்கும் தொழிலாளி ஒருவர் விசிட்டிங் கார்டு அடித்து விவசாயிகளிடம் விநியோகம் செய்து வருகிறார். உள்ளூரில் எங்கு வேண்டுமானாலும் சென்று வேலை செய்வேன் ஆனால் சாப்பாட்டுடன் ஒரு நாளைக்கு ரூ.500 கொடுக்க வேண்டும் என்பது தான் அழகர்சாமியின் கண்டிஷன்.
ஒரு சில விவசாயிகள் இதற்கு ஒப்புகொண்டு அழகர்சாமியை அழைத்து ஆடு மேய்க்கும் பணியை கொடுக்கின்றனர். எனினும் தன்னை மீண்டும் தொடர்பு கொள்ள அவர்களுக்கு வசதியாக இருக்க வேண்டும் என்பதாலேயே கிருஷ்ணமநாயக்கன்பட்டியை சேர்ந்த அழகர்சாமி இது போன்று விசிட்டிங் கார்ட் அடித்து விளம்பரம் செய்வதாக கூறுகிறார்.












Click it and Unblock the Notifications