வீட்டை விற்றாவது லஞ்சம் கொடு... போலீசின் மிரட்டலுக்கு பயந்து தற்கொலை முயற்சியில் ஈடுபட்ட விவசாயி
மதுரை: வீட்டை விற்றாவது லஞ்சம் கொடுத்தால் தான் புகார் மீது நடவடிக்கை எடுப்பேன் என்று இன்ஸ்பெக்டர் மிரட்டியதால் வேறு வழியில்லாமல் தற்கொலை முயற்சியில் ஈடுபட்ட விவசாயி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
மதுரை மாவட்டம் வாடிப்பட்டி வட்டத்தில் உள்ள செம்மினிப்பட்டியில் வசித்து வருபவர் சின்னயன். இவருடைய தம்பி இவருக்கு பல்வேறு வகையில் தொல்லை கொடுத்து வந்ததால், இவர் தனது சொந்த வீட்டிற்கு வாரத்தில் 2 நாட்கள் மட்டும்தான் சென்று வருவார். தனது வீட்டிற்கு செல்லும் செவ்வாய் மற்றும் வெள்ளி ஆகிய இருநாட்கள் தவிர மற்ற நாட்களில் ஆடு, மாடு மேய்த்துவிட்டு காடுகழனிகளில் தனது நாட்களை கழித்து வந்தார். இந்த இரண்டு நாட்கள் வீட்டிற்கு சென்று வருவதிலும் சிக்கல் இருந்து வந்ததால், வாடிப்பட்டி காவல்நிலையத்தில் புகார் ஒன்றை சின்னயன் கொடுத்துள்ளார்.

சின்னயன் கொடுத்த புகாரின் அடிப்படையில் அவரது தம்பியை விசாரிக்க வேண்டும் என்றால் 10 ஆயிரம் ரூபாய் பணம் கொடுக்க வேண்டும் என்று இன்ஸ்பெக்டர் முருகேசன் சின்னயனிடம் லஞ்சம் கேட்டிருக்கிறார். அவ்வளவு பணம் இல்லை தன்னிடம் இல்லை என்று சின்னயன் பதில் கூறியுள்ளார். இதற்கு இன்ஸ்பெக்டர் முருகேசன், வீட்டை விற்றாவது 10 ஆயிரம் கொடு என்று மிரட்டி இருக்கிறார்.
இன்ஸ்பெக்டரின் இந்த அடாத செயலால் என்ன செய்வது எங்கே மீண்டும் முறையிடுவது என்று தெரியாத சின்னயன் மனம் நொந்து போய், வாடிப்பட்டி அண்ணாசிலை முன்பு கடிதம் ஒன்றை எழுதி வைத்துவிட்டு பூச்சிமருந்து குடித்துவிட்டு தற்கொலைக்கு முயன்றுள்ளார். இதைக்கண்ட பொதுமக்கள் அவரை மீட்டு வாடிப்பட்டி மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். பின்னர், மேல் சிகிச்சைக்காக மதுரை ராஜாஜி அரசு மருத்துவமனைக்கு மாற்றப்பட்டு சின்னயன் சிகிச்சை பெற்று வருகிறார்.












Click it and Unblock the Notifications