தொடரும் சோகம்… திருவாரூரில் மேலும் ஒரு விவசாயி மாரடைப்பால் மரணம்
திருவாரூர் மாவட்டத்தில் மேலும் ஒரு விவசாயி மரணம் அடைந்துள்ளார். திருவாரூரில் மட்டும் வறட்சியின் காரணமாக இதுவரை 15 விவசாயிகள் பலியாகியுள்ளனர்.
திருவாரூர்: காவிரி டெல்டா பகுதியான திருவாரூரில் மேலும் ஒரு விவசாயி மாரடைப்பால் மரணம் அடைந்துள்ளார். பயிர்கள் கருகியதை கண்ட அதிர்ச்சியில் தற்கொலை மற்றும் மாரடைப்பால் மரணம் அடைந்துள்ளவர்களின் எண்ணிக்கை திருவாரூரில் மட்டும் 15யைத் தாண்டியுள்ளது.
திருவாரூர் மாவட்டம் நெடுங்குளம் பகுதியைச் சேர்ந்த விவசாயி ஜெயக்குமார். இவர், வழக்கம் போல வயலுக்கு சென்றிருந்த போது, பயிர்கள் கருகி போய் இருப்பதைக் கண்டு அதிர்ச்சியில் சுருண்டு விழுந்து மரணமடைந்துள்ளார். தண்ணீர் இன்றி பயிர்கள் கருகியதைக் கண்டு மனம் உடைந்த நிலையில் விவசாயி ஜெயக்குமார் இருந்ததாகவும், அதனால் ஏற்பட்ட மாரடைப்பால் அவர் இறந்துவிட்டதாகவும் அவரது உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.

வறட்சி பாதிக்கப்பட்டதால் திருவாரூர் மாவட்டத்தில் மட்டும் இதுவரை 15 பேர் மரணமடைந்துள்ளனர். தமிழகம் முழுவதும் 80 விவசாயிகள் வறட்சிக்கு பலியாகியுள்ளனர். காவிரியும் இல்லாமல், மழையும் கை கொடுக்காமல் விவசாயிகளின் நிலை படுமோசமான நிலையை நோக்கிச் சென்று கொண்டிருக்கிறது.
இந்நிலையில், இன்று தமிழக அரசு விவசாயம் பாதிக்கப்பட்ட பகுதிகளை பார்வையிட்டு அறிக்கை அளிக்க உத்தரவிட்டுள்ளது. அதன் அடிப்படையில் நிவாரணம் வழங்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்திருந்தாலும், விவசாயிகளின் மரணம் குறித்தும் அவர்களின் குடும்பத்திற்கான இழப்பீடு குறித்தும் எந்த அறிவிப்பையும் வெளியிடவில்லை.












Click it and Unblock the Notifications