தொடரும் விவசாயிகள் மரணம்- வெண்மணி அருகே அதிர்ச்சியில் விவசாயி நடேசன் உயிரிழப்பு!
விவசாயம் பொய்த்துப்போன அதிர்ச்சியில் வெண்மணி அருகே விவசாயி நடேசன் உயிரிழந்துள்ளார்.
நாகை: காவிரி நீர் கிடைக்காமல் விவசாயம் பொய்த்துப் போன அதிர்ச்சியில் நாகை மாவட்டம் வெண்மணி அருகே விவசாயி நடேசன் மரணமடைந்திருப்பது பெரும் துயரத்தை ஏற்படுத்தியுள்ளது.
தமிழகத்துக்கான காவிரி நீரை திறந்துவிட உச்சநீதிமன்றம் உத்தரவிட்டும் அதை அமல்படுத்தவில்லை கர்நாடகா. உச்சநீதிமன்ற உத்தரவை மதிக்காத கர்நாடகாவை மத்திய அரசும் கண்டிக்கவில்லை.
காவிரி நீர் உரிமையை நிலைநாட்டக் கூடிய காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்கவே முடியாது என தமிழகத்துக்கு பச்சை துரோகம் செய்திருக்கிறது மத்திய அரசு. இதனால் முப்போக சாகுபடி நடைபெற்ற தமிழகத்தின் காவிரி டெல்டா பகுதிகள் ஒருபோக சாகுபடிக்கும் வழியற்ற நிலையில் இருக்கின்றன.
விவசாயத்தை மட்டுமே நம்பி வாழும் காவிரி டெல்டா விவசாயிகள் செய்வதறியாது விரக்தியில் விஷம் அருந்தி உயிரை மாய்ப்பது தொடர்ந்து வருகிறது. காவிரி டெல்டாவில் அண்மையில் மட்டும் 4 விவசாயிகள் விஷம் அருந்தியும் அதிர்ச்சியிலும் மரணமடைந்துள்ளனர்.
தற்போது வெண்மணி அருகே தாவல்குடியைச் சேர்ந்த விவசாயி நடேசனும் விவசாயம் பொய்த்துப்போன அதிர்ச்சியில் உயிரிழந்துள்ளார். விவசாயிகளின் தொடர் உயிரிழப்புகள் காவிரி டெல்டாவில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.