முதல்வர் தொகுதியில் வாழ்க்கையைப் பறித்த வாழை - நஷ்டத்தால் விவசாயி தற்கொலை
தேனி: தமிழக முதல்வர் பன்னீர் செல்வம் சட்டமன்ற உறுப்பினராக வெற்றி பெற்ற போடிநாயக்கனூர் தொகுதியில் வாழைக்கு உரிய விலை கிடைக்காததால் விஷம் குடித்து விவசாயி தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பெரும் பரபரப்பினை ஏற்படுத்தியுள்ளது.
தேனி மாவட்டம் போடி தொகுதிக்குட்பட்டது உப்புக்கோட்டை கிராமம். இங்கு வடக்கு தெருவில் வசித்தவர் விவசாயி அழகுவேல். இவருக்கு ஜோதி என்ற மனைவியும், மேகலா , அருண், ஜீவன் என்ற குழந்தைகளும் உள்ளனர்.

அழகுவேல் ஒன்றரை ஏக்கர் நிலம் குத்தகைக்கு எடுத்து சொட்டு நீர்பாசன முறையில் திசுவாழை சாகுபடி செய்தார். குத்தகை தொகை சாகுபடி என ரூபாய் 3 லட்சம் வரை செலவு செய்தார். ஆயிரம் வாழையில் தார் போட்டு விற்பனைக்கு தயாராக உள்ளது. ஆனால் விலை இல்லாததால் வியாபாரிகள் வாங்க முன்வரவில்லை.ஏற்கனவே வாழை சாகுபடி செய்துள்ள விவசாயிகள் உரிய விலை கிடைக்காமல் வாழைதார்களை ரோட்டோரங்களில் வெட்டி வீசினர்.
மாவட்டத்தில் பல ஆயிரம் ஏக்கரில் செய்துள்ள வாழையில் வெட்டுக்கூலி கூட மிஞ்சாது என்பதற்காக மரத்திலேயே பல விவசாயிகள் விட்டுள்ளனர். சிலர் ஆடுமாடுகளுக்கு உணவாக தருகின்றனர். மாவட்டத்தில் திசுவாழை உற்பத்தி ஒரே நேரத்தில் அபரிமிதமான மகசூல் கண்டதால் கிலோ ரூபாய் 2 க்கு கூட வாங்க ஆள் வரவில்லை.இந்த சூழ்நிலையில் வாழைசாகுபடி செய்திருந்த விவசாயி அழகுவேல் சாகுபடிக்காக வாங்கிய கடனை அடைக்க முடியாமல் கடன்சுமையில் தவித்தார்.
நேற்று முன்தினம் பகல் 2 மணிக்கு தோட்டத்திற்கு சென்றவர் விஷக்காயை தின்று தோட்டத்தில் மயங்கி கிடந்தார். உயிருக்கு போராடிய தந்தையை மகன் ஜீவன் தேனி மருத்துவகல்லுாரி மருத்துவமனையில் சேர்த்தார். ஆனால், சிகிச்சை பலனளிக்காமல் அவர் உயிரிழந்தார்.
தமிழக முதல்வர் பன்னீர்செல்வம் தொகுதியில் விளைபொருளுக்கு உரிய விலை கிடைக்காமல் விவசாயி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. இதுகுறித்து வீரபாண்டி போலீசார் வாழைசாகுபடி செய்து நஷ்டம் ஏற்பட்டதால் தற்கொலை செய்து கொண்டதாக வழக்கு பதிவு செய்துள்ளனர்.












Click it and Unblock the Notifications