விவசாய நிலங்களில் மின்கோபுரம்.. சொந்த நிலத்திலேயே அகதிகளான விவசாயிகள்.. தோப்பில் தஞ்சம்
நிலங்களில் உயர்மின்கோபுரம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து விவசாயிகள் நிலங்களில் தஞ்சமடைந்துள்ளனர்.
கிருஷ்ணகிரி: தங்களது ஒட்டுமொத்த வாழ்வும், இருக்கும் கொஞ்ச நஞ்ச நிலமும் எப்போது வேண்டுமானாலும் பறிக்கப்பட்டும் என்று அச்சத்தில், சொந்த நிலத்தில் அகதிகளாக மாறியுள்ள அவலம் கிருஷ்ணகிரி குடிமேனஅள்ளி கிராம மக்களுக்கு ஏற்பட்டுள்ளது.
தமிழகத்தில் வேலூர், கிருஷ்ணகிரி, தருமபுரி, சேலம், ஈரோடு வழியாக திருப்பூர் மாவட்டத்தில் உள்ள விவசாய நிலங்களில் உயர் மின்கோபுரம் அமைத்து மின்கம்பிகள் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது.
ஒவ்வொரு இடமாக உயர்மின்கோபுரம் அமைத்து வந்த வருவாய்த்துறையினர், தற்போது கிருஷ்ணகிரி மாவட்டத்துக்குள் அடியெடுத்து வைத்துள்ளனர். இந்த மாவட்டத்தில் போச்சம்பள்ளி அடுத்த பண்ணந்தூர் வழியாக பெரிய கூத்தம்பட்டி, சின்ன கூத்தம்பட்டி, செட்டிகொள்ளை, தலையன்கொட்டாய், தேவிரஹள்ளி, குடிமேனஹள்ளி மற்றும் அதன் சுற்றுப்புற கிராமங்களில்தான் இந்த உயர்மின்கோபுரம் அமைக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
நில அளவீடு
இவ்வாறு உயர்மின்கோபுரம் அமைக்க கூடாது என இந்த கிராம மக்கள் பல்வேறு கட்டங்களில் பல்வேறு வடிவங்களில் தங்களது எதிர்ப்புகளையும், கண்டனங்களையும் பதிவு செய்து வருகின்றனர். ஆனால் அரசு எதையும் காதில் போட்டுக் கொள்ளவில்லை எனவும் தங்களுக்கு தெரியாமலேயே நிலங்களில் வருவாய்த்துறையினர் அளவீடு பணிகள் மேற்கொண்டு வருவதாகவும் அவர்கள் குற்றஞ்சாட்டுகின்றனர். இதனால் கடந்த 13ம் தேதி அதிரடிப்படை போலீஸ் பாதுகாப்புடன் குடிமேனஅள்ளி கிராமத்திற்கு நிலத்தை அளவீடு செய்ய வருவாய்த்துறை அதிகாரிகள் சென்றனர்.
தீக்குளிக்க முயற்சி
அதிகாரிகளை கண்டதும் நிலத்தின் உரிமையாளர்களான விவசாயிகள் ஆத்திரமும், அச்சமும், பதட்டமும் அடைந்தனர். தங்களது நிலத்தை அளக்க வேண்டாம் என கேட்டுக் கொண்டனர். ஆனால் அதிகாரிகள் செவிசாய்க்காமல் அளவீடு செய்ய முயன்றனர். இதனால் விவசாயிகள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். அதற்கு அதிகாரிகள், அரசு திட்டங்களுக்காக எந்த நிலத்தையும் கையகப்படுத்தலாம் என்றனர். இந்த பதிலைக் கேட்டதும் பொறுக்க முடியாத அங்கிருந்த பெண்கள், மற்ற விவசாயிகள் மண்ணெண்ணெய் ஊற்றி தீக்குளிக்க முயன்றனர். இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
கண்டன ஆர்ப்பாட்டம்
இதனால் விவசாயிகளை சமாதானப்படுத்தலாம் என்று கடந்த 14-ம் தேதி கிருஷ்ணகிரி வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்தில் அமைதி பேச்சுவார்த்தைக்கு நிலம் சம்பந்தப்பட்ட விவசாயிகள் அதாவது நில உரிமையாளர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டது. ஆனால் விவசாய சங்க நிர்வாகிகளையும் இந்த பேச்சுவார்த்தைக்கு அனுமதிக்க வேண்டும் என்று விவசாயிகள் அனைவரும் ஒட்டுமொத்தமாக கோரிக்கை விடுத்தனர். இதற்கு ஆர்டிஓ, வட்டாட்சியர் அனுமதி தரவில்லை. இதனால் அங்கேயே கண்டன ஆர்ப்பாட்டத்தை நடத்திவிட்டு விவசாயிகள் பேச்சுவார்த்தையில் கலந்துகொள்ளாமல் கலைந்து சென்றுவிட்டனர்.
அச்சமடைந்த பொதுமக்கள்
இந்நிலையில் நேற்று காலை குடிமேனஅள்ளி கிராமத்தில் மின்கோபுரம் அமைக்க வழக்கம்போல நிலத்தை அளவீடு செய்ய அதிகாரிகள் வந்தனர். போச்சம்பள்ளி வட்டாட்சியர் கோபிநாத் தலைமையில், வருவாய்த்துறையினர், டிஎஸ்.பி.க்கள், அதிரடி போலீசார் என 100-க்கும் மேற்பட்டோர் கிராமத்தின் விவசாய நில பகுதிக்கு சென்றனர். அங்கு தயார் நிலையில் ஆம்புலன்ஸ், தீயணைப்பு வாகனம், துப்பாக்கி ஏந்திய போலீசார்... இதையெல்லாம் கண்டதும் பொதுமக்கள் அதிர்ச்சியடைந்தனர். ஆனால் நிலத்தை பார்வையிட்டுவிட்டு சிறிது நேரத்தில் வந்தவர்கள் அனைவரும் திரும்பி சென்றுவிட்டனர்.
தென்னந்தோப்பில் தஞ்சம்
இந்த சம்பவம் நடைபெற்ற நேற்றிலிருந்து விவசாயிகளுக்கு பீதியும், பதட்டமும் ஏற்பட்டது. எப்போது வேண்டுமானாலும் நம்முடைய விவசாய நிலம் பறிபோய்விடுமோ என்று அச்சம் பீடிக்க தொடங்கியது. அதற்கு காரணம், பிற மாவட்ட அல்லது பிற பகுதி விவசாயிகளை இந்த குடிமேனஅள்ளி கிராம மக்கள் சொற்ப அளவே நிலத்தை வைத்துள்ளதுதான். அதாவது மொத்த இடமே சென்ட் கணக்குதான். இந்த இடம்தான் அவர்களின் மொத்த சொத்தும்-எச்சமுள்ள வாழ்வும். அதனால்தான் இந்த கிராம விவசாயிகள் எப்போது வேண்டுமானாலும் அதிகாரிகள் வந்துவிடக்கூடும், நம் நிலத்தை பறித்துவிடக்கூடும் என்று அச்சப்பட்டு, விவசாயிகள் தங்களது குழந்தைகளுடன் நிலத்தில் உள்ள தென்னந் தோப்புகளில் தஞ்சமடைந்துள்ளனர்.
குழந்தைகளுடன் தஞ்சம்
தங்களது வீட்டை விட்டு, குழந்தை-குட்டிகளோடு நூற்றுக்கும் மேற்பட்டோர் அந்த தோப்பில் தற்காலிகமாக குடிசைகளை அமைத்துள்ளனர். தங்களுக்கு தேவையான உணவினை அங்கேயே சமைத்து சாப்பிட்டு கொண்டிருக்கிறார்கள். இவர்கள் இப்படி தோப்பில் குடிசைபோட்டு குடியேறி உள்ளது போலீசாருக்கும் தெரிந்துள்ளது. எனவே அசம்பாவிதங்களை தடுக்க 50-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஊருக்குள் ஈடுபட்டு வருகின்றனர். ஆனால் 100-க்கும் மேற்பட்ட விவசாயிகளோ, பெற்ற பிள்ளையை பறிகொடுக்க ஒரு தாய் எப்படி துடிப்பாளோ, அதுபோல தங்களது நிலத்தை கொடுக்க மனமில்லாமலும், வேறு வழி தெரியாமலும் பதட்டம்-பீதி-அச்சத்துடனே ஒவ்வொரு நிமிடத்தையும் அந்த தோட்டத்தில் கழித்து வருகிறார்கள்.