எடப்பாடி பழனிச்சாமி காரை மறித்து விவசாயிகள் முற்றுகை… சேலத்தில் பரபரப்பு
எடப்பாடி பழனிச்சாமி காரை மறித்து விவசாயிகள் முற்றுயிட்டனர். வறட்சி பாதிப்பை பார்வையிடச் சென்ற அமைச்சர் கார் மறிக்கப்பட்டதால் சேலத்தில் பரபரப்பு ஏற்பட்டது.
சேலம்: வறட்சி பாதிக்கப்பட்டப் பகுதிகளை தமிழக அமைச்சர்கள் பார்வையிட்டு வருகின்றனர். அப்படி சேலம் மாவட்டத்தில் வறட்சி பாதிக்கப்பட்ட இடங்களை ஆய்வு செய்ய நெடுஞ்சாலைத் துறை அமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி சென்ற போது அவரது காரை விவசாயிகள் மறித்து முற்றுகையிட்டனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
ஆத்தூர் கெங்கவல்லி பகுதிகளில் வறட்சியால் பாதிக்கப்பட்ட விளை நிலங்களை அமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி மற்றும் அதிகாரிகள் குழுவினர் ஆய்வு செய்தனர். அப்போது முல்லைவாடி அருகே அமைச்சரின் கார் சென்று கொண்டிருந்த போது விவசாயிகள் வழி மறித்து நின்றனர்.

முற்றுகையிட்ட விவசாயிகள், தங்கள் பகுதிகளையும் பார்வையிட வேண்டும் என்று அமைச்சரிடம் கோரிக்கை வைத்தனர். அதற்கு பதில் அளித்த அமைச்சர், பயிர் காப்பீடு செய்திருந்தால் இழப்பீடு வழங்கப்படும் என்று கூறிவிட்டு அங்கிருந்து சென்றுவிட்டார். அமைச்சரின் இந்த பதில் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
சேலம் மாவட்டத்தில் வறட்சி பாதிக்கப்பட்ட இடங்களை ஆய்வு செய்த பின்னர் அமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி மற்றும் அதிகாரிகள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஆலோசனை நடத்தினார். பின்னர், வறட்சி தொடர்பான ஆய்வறிக்கையை 3 நாட்களுக்குள் சமர்ப்பிக்க வேண்டும் என்று அமைச்சர் கூறினார்.
இதனைப் போன்றே தருமபுரி மாவட்டத்தில் வறட்சி பாதிக்கப்பட்ட பகுதிகளை உயர்கல்வித்துறை அமைச்சர் கே.பி.அன்பழகன் தலைமையிலான குழு ஆய்வு செய்தது. மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே உள்ள மீனாட்சிபுரம் கிராமத்தில் வறட்சி பாதிக்கப்பட்ட பகுதிகளை கூட்டுறவுத் துறை அமைச்சர் செல்லூர் ராஜு, வருவாய்த்துறை அமைச்சர் உதயகுமார் மற்றும் அதிகாரிகள் ஆய்வு செய்தனர்.












Click it and Unblock the Notifications