கொட்டிய மழை தொடரும் என நம்பிக்கை.... 7 ஆண்டுகளுக்குப் பின் நெல் நடவுப் பணிகள் மும்முரம்
மழை தொடரும் என்கிற நம்பிக்கையில் வேடசந்தூர் விவசாயிகள் நெல் நடவுப் பணிகளில் ஈடுபட்டுள்ளனர்.
Recommended Video

திண்டுக்கல்: ஐப்பசி, கார்த்திகையிலும் கனமழை தொடரும் என்கிற நம்பிக்கையில் திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் சுற்றுவட்டாரப் பகுதிகளில் நெல் நடவுப் பணிகள் மும்முரமடைந்துள்ளன.
தமிழகத்தின் வறட்சியான பகுதிகளில் ஒன்று வேடசந்தூர் வட்டம். வானம் பார்த்த பூமியாக, கொட்டும் மழையையும் நிலத்தடி நீரையும் மட்டுமே நம்பி இங்கு விவசாய பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன.

எங்கெங்கும் வெறுமை
கடந்த சில ஆண்டுகளாக மழை பொய்த்துப் போனதால் எங்கெங்கு திரும்பினாலும் வெறுமைதான்... வேடசந்தூர் சுற்றுவட்டாரத்தில் தொலைதூர கிராமங்கள் கூட காய்ந்து போன செடி கொடிகளால், வேளாண் சாகுபடி இல்லாததால் பளிச்சென தெரிந்த பெருங்கொடுமை நிகழ்ந்தது.

காட்சிப் பொருளான நெல் நடவு
நெற்கதிர்கள் செழித்து திளைத்திருந்த வயல்கள் கைவிடப்பட்டு பராரிகளின் தேசம்போல காட்சி தந்தது. நெல் நடவுப் பணி என்பதே காண முடியாத காட்சிப் பொருளாகிப் போனது. தற்போது விடாது கொட்டிய கனமழை வேடசந்தூர் சுற்றுவட்டார பகுதிகளை மக்களை மகிழ்ச்சியடைய வைத்துள்ளது.

மகிழ்ச்சியில் விவசாயிகள்
தொலைந்து போன பசுமையின் வாசத்தை இப்போது உணர முடிகிறது... கால்நடைகளுக்கு காசு கொடுத்து தீவனங்களை வாங்கி போட்டு கட்டுப்படியாகமல் விழிபிதுங்கியவர்கள் கண்களில் திரும்பிய திசையெங்கும் வளர்ந்து நிற்கும் சோளத்தட்டைகள் ஆனந்த கண்ணீரை உதிர்த்து கொண்டிருக்கிறது.

ஆறுதல் தரும் காட்சிகள்
ஆடி மாதம் பெய்த மழை ஐப்பசியிலும் கார்த்திகையிலும் தொடரும் என்கிற நம்பிக்கையில் மீண்டும் நெல் நடவுப் பணிகள் உயிர்ப்பித்திருக்கின்றன. நெல்வயல்களை பண்படுத்தி பரம்படிப்பது, நாற்று நடுதல் என விவசாயத்தை மட்டுமே இன்னமும் நம்பியிருக்கும் ஜீவன்கள் நீண்டகாலத்துக்குப் பின் சேற்றில் கால் வைத்திருக்கும் காட்சிகள் ஆறுதலைத் தருகின்றன.












Click it and Unblock the Notifications