காவல் ஆய்வாளருக்கு பளார்.. செல்போனை பிடுங்கிச் சென்றதால் ஆத்திரம்.. மயிலாடுதுறையில் தந்தை, மகன் கைது
மயிலாடுதுறை: மயிலாடுதுறை அருகே போக்குவரத்துக்கு இடையூறு அளிக்கும் விதமாக சாலையில் நின்று செல்போன் பேசிக் கொண்டிருந்த நபரின் செல்போனை வாங்கிச் சென்ற காவல் ஆய்வாளரை காவல் நிலையத்துக்குச் சென்று தாக்கியுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதுதொடர்பாக தந்தை மற்றும் அவரது மகனை போலீஸார் கைது செய்துள்ளனர்.
இன்றைய காலத்தில் சிறுவர்கள் முதல் முதியவர்கள் வரை செல்போன் பயன்பாடு அதிகரித்து வருகிறது. மொபைலில் கேம் விளையாடுவது, ரீல்ஸ் பார்ப்பது, பேஸ்புக், யூடியூப் போன்ற சமூக வலைதளங்களை பார்ப்பது, ஏன் சிலர் வாகனம் ஓட்டிக் கொண்டே நாடகம் பார்க்கும சம்பவங்களும் நிகழ்ந்து வருகின்றன. இந்நிலையில், போக்குவரத்துக்கு இடையூறு அளிக்கும் வகையில் செல்போன் பேசிக் கொண்டிருந்த நபரை கண்டிப்பதற்காக காவல் ஆய்வாளர் ஒருவர் செல்போனை வாங்கி காவல் நிலையத்துக்குச் சென்றுள்ளார். இதையடுத்து, காவல் நிலையத்துக்குச் சென்று காவல் ஆய்வாளரை தந்தை, மகன் தாக்கிய சம்பவம் அதிர்ச்சிக்குள்ளாக்கி உள்ளது.

மயிலாடுதுறை மாவட்டம், குத்தாலம் காவல் நிலைய ஆய்வாளராகப் பணியாற்றி வருபவர் ஜோதிராமன். இவர், கடைவீதி பகுதியில் காவல் வாகனத்தில் சென்று கொண்டிருந்துள்ளார். அப்போது, ராஜகோபாலபுரத்தைச் சேர்ந்த மகேஸ்வரன் என்பவரின் மகன் கிஷோர் சாலையில் போக்குவரத்துக்கு இடையூறாக நின்று கொண்டு செல்போன் பேசிக் கொண்டிருந்ததாகக் கூறப்படுகிறது. இதையடுத்து, காவல் ஆய்வாளர் ஜோதிராமன் வாகனத்துக்கு வழிவிடாமல் நின்ற கிஷோரை இறங்கிச் சென்று கண்டித்துள்ளார்.
அப்போது, காவல் ஆய்வாளரிடம் கிஷோர் திமிராகப் பேசியதாகக் கூறப்படுகிறது. இதையடுத்து, கிஷோரின் செல்போனை வாங்கிக் கொண்டு காவல் நிலையத்திற்கு வரச் சொல்லியுள்ளார் ஜோதிராமன். இதைத்தொடர்ந்து, கிஷோர் மற்றும் அவரது தந்தை மகேஷ்வரன் இருவரும் சேர்ந்து குத்தாலம் காவல் நிலையத்திற்குச் சென்றுள்ளனர். பின்னர், கடைவீதியில் என் மகனை அடித்து எதற்காக செல்போனை பிடுங்கி வந்தீர்கள் என்று கூறி காவல் நிலைய ஆய்வாளரிடம் வாக்குவாதம் செய்துள்ளார்.
இதைத்தொடர்ந்து, வாய்த்தகராறு முற்றியுள்ளது. ஆத்திரமடைந்த மகேஸ்வரன், காவல் ஆய்வாளர் ஜோதிராமனின் கன்னத்தில் அறைந்துள்ளார். இதுதொடர்பாக, காவல் ஆய்வாளரை பணி செய்யவிடாமல் தடுத்து தாக்கி மிரட்டியதாக மகேஸ்வரன் மற்றும் அவரது மகன் கிஷோர் மீது 5 பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. இதைத்தொடர்ந்து, தந்தை மகன் இருவரையும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி மயிலாடுதுறை கிளைச் சிறையில் அடைத்தனர். காவல் நிலையத்துக்குச் சென்ற காவல் ஆய்வாளரையே தாக்கிய சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.












Click it and Unblock the Notifications