பொள்ளாச்சி பெற்ற மகளுக்கு சூடு போட்ட குடிகார தந்தை கைது
கோவை: குடிபோதையில் பெற்ற மகளின் கன்னத்தில் இரும்பு கம்பியால் சூடு போட்ட குடிகார தந்தையை பொள்ளாச்சி போலீசார் கைது செய்து கோவை மத்திய சிறையில் அடைத்துள்ளனர். நாளை தந்தையர் தினம் கொண்டாடப்பட உள்ள நிலையில் பெற்ற மகளுக்கு தந்தை சூடு வைத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கோவை மாவட்டம் பொள்ளாச்சி அருகே சூலூர் ஜெய்கிருஷ்ணாபுரத்தை சேர்ந்தவர் கோவிந்தராஜ். இரு சக்கரவாகனத்தை பழுது பார்க்கும் இவருக்கு சுதா, 28 என்ற மனைவியும், காயத்ரி, 8, காமேஸ், 3 என்ற இரண்டு குழந்தைகளும் உள்ளனர்.
சுதா குடிமங்கலம் பகுதியில் தனியார் மில்லில் வேலை பார்த்து வருகிறார். குழந்தைகளை வீட்டில் விட்டு விட்டு சுதா, நேற்றிரவு மில் வேலைக்கு சென்று விட்டார்.
கோவிந்தராஜ் மது குடித்து விட்டு இரவு வீட்டுக்கு வந்தார். வீட்டில் தூங்கி கொண்டிருந்த சிறுமி காயத்ரி அருகே அவர் சென்றார். திடீரென காயத்ரியின் காதை திருகி கொண்டு மேலே தூக்கினார். இதில் சிறுமி அலறினார். பின்னர் சிறுமியின் 2 கன்னத்திலும் இரும்பு கம்பியால் சூடு போட்டார். இதில் சிறுமி காயத்ரி வலி தாங்க முடியாமல் அலறி கூச்சல் போட்டாள்
சிறுமி அலறிய சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தினர் திரண்டு வந்தனர். அப்போது சூடு வைத்ததால் சிறுமி கதறி அழுவதை கண்டு அவர்கள் திடுக்கிட்டனர். உடனே இந்த சம்பவம் பற்றி அவர்கள் சுதாவுக்கு தகவல் தெரிவித்தனர்.
மில்லில் இருந்து உடனடியாக வீட்டிற்கு வந்த சுதா, மகளின் கன்னத்தில் கணவர் குடிபோதையில் சூடு வைத்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.
கன்னத்தின் காயத்திற்கு மருந்து போட்ட சுதா, மகள் காயத்ரியை உடனடியாக பொள்ளாச்சி அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்று சிகிச்சைக்காக அனுமதித்தார் .
குடிபோதையில் மகளுக்கு சூடு வைத்த சம்பவம் குறித்து கணவர் மீது அவர் நெகமம் போலீசில் புகார் செய்தார். அதன் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து கோவிந்தராஜை கைது செய்தனர்.
நீதிபதி முன்பு ஆஜர் படுத்தி கோவிந்தராஜை கோவை மத்திய சிறையில் அடைத்தனர். குடிபோதையில் பெற்ற மகள் என்றும் பாராமல் தந்தை சூடு வைத்த சம்பவம் பொள்ளாச்சி பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.