ரூ.3 லட்சம் கொடுத்து கூலிப்படையை ஏவி மகனை கொன்ற அதிமுக பிரமுகர்: ஈரோடு அருகே பரபரப்பு
ஈரோடு: பவானி அடுத்த அம்மாபேட்டை, ஊஞ்சப்பாளையத்தில் வசிப்பவர் சதாசிவம். அ.தி.மு.க., பிரமுகரான இவர், மாவட்ட பஞ்சாயத்து கவுன்சிலராக, கடந்த முறை செயல்பட்டார்.தற்போது, பூதப்பாடி கிளை செயலாளராக உள்ளார். இவருக்கு தனலட்சுமி என்ற முதல் மனைவியும், அவருக்கு, பிரபு (34) என்ற மகனும் உள்ளனர். தனலட்சுமி இறந்ததால், சித்ரா என்பவரை இரண்டாவதாக திருமணம் செய்து கொண்டார்.
இந்நிலையில் கடந்த 7ம் தேதி இரவு, தோட்டத்தில் பிரபு கொலை செய்யப்பட்டு கிடந்தார். தலையில் காயத்துடன், வாயில் நுரை தள்ளியபடி உடல் கிடந்தது. இதுபற்றி அம்மாபேட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் சுப்புரத்தினம் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார். கொலையாளிகளை பிடிப்பதற்காக தனிப்படை அமைக்கப்பட்டது. தனிப்படை போலீசார் கொலையாளிகளை வலைவீசி தேடி வந்தார்கள்.
இந்தநிலையில் நேற்று காலை சதாசிவம் அந்தப்பகுதி கிராம நிர்வாக அதிகாரி சதீஸ்குமாரிடம் தன்னுடைய மகனை ஆள் வைத்து கொன்றதாக கூறி சரண் அடைந்தார். உடனே சதாசிவத்தை சதீஸ்குமார் அம்மாபேட்டை போலீசில் ஒப்படைத்தார்.
ஒரே மகன்
போலீசில் சதாசிவம் அளித்துள்ள வாக்குமூலம் விவரம் வருமாறு: பிரபு என்னுடைய ஒரே மகன். 9ம் வகுப்பு வரை படித்துவிட்டு, அதற்கு மேல் பள்ளிக்கு செல்லமாட்டேன் என்று வீட்டிலேயே இருந்துவிட்டான். வளர்ந்த பின்னரும் திருந்தாமல் அடிக்கடி என்னிடம் தகராறு செய்தான். இதனால் அவனை பூனாட்சியில் உள்ள பாட்டி வீட்டில் தங்கவைத்தேன். அங்கு வாடகை கார் ஓட்டி வந்தான்.
பெண்களுடன் தகாத உறவு
இந்தநிலையில் திருமணமும் செய்துகொள்ளாமல், பல பெண்களுடன் தகாத உறவு வைத்திருந்தான். மேலும் சொத்தை பிரித்து கொடு என்று தகராறு செய்தான். ஊர் பெரியவர்களை வைத்து பஞ்சாயத்து பேசினேன். அப்போது அனைவரின் முன்னாலும் என்னை கேவலமாக பேசினான். சொத்து முழுவதும் தனக்கே வேண்டும் என்று மிரட்டிவிட்டு சென்றான். இனி அவனை உயிருடன் விட்டுவைத்தால் என்னை கொன்றுவிடுவான் என்று அவனை கொல்ல முடிவு செய்தேன்.
ரூ.3 லட்சம் பணம்
அதைத்தொடர்ந்து பிரபுவை கொலை செய்ய பூனாச்சியை சேர்ந்த பாலு என்கிற பாலசுப்பிரமணியத்தை நாடினேன். அவர் பிரபுவை கொலை செய்ய 3 லட்சம் பணம் இல்லை என்றால் 5 சென்ட் நிலம் கொடுக்க வேண்டும் என்றார். நான் 3 லட்சம் பணம் கொடுப்பதாக ஒப்புக்கொண்டு, முன்பணமாக ரூ.30 ஆயிரம் கொடுத்தேன்.
மனது சரியில்லாததால் மது
கொலை நடைபெற்ற அன்று இரவு எனக்கு மனது சரியில்லை. எனவே வெகுநேரம் மது அருந்தினேன். மறுநாள் காலை மகனை காணவில்லை என்று என்னுடைய மனைவி, மாமியார் ஆகியோருடன் சேர்ந்து நானும் பிரபுவை தேடுவதுபோல் நாடகமாடினேன். அப்போது தோட்டத்தில் பிரபு கொலை செய்யப்பட்டு கிடந்தான். நானும் அவர்களுடன் சேர்ந்து கதறி அழுதேன். இந்தநிலையில் எப்படியும் போலீசில் மாட்டிக்கொள்வேன் என்று எனக்கு பயம் ஏற்பட்டது. அதனால் நானே சரண் அடைந்தேன். இவ்வாறு சதாசிவம் போலீசில் வாக்குமூலம் அளித்துள்ளார்.
அதைத்தொடர்ந்து பிரபுவை கொலை செய்த பாலசுப்பிரமணியத்தை போலீசார் தேடி வருகிறார்கள். அவர் பிடிப்பட்ட பிறகே இதில் தொடர்புடையவர்கள் வேறு யார், யார்? என்று தெரியவரும்.