ஜெயிலில் இருந்த மகனுக்கு போலி பிறப்புச் சான்றிதழ் தயாரித்த தந்தைக்கு 3 ஆண்டுகள் சிறை
கோவை: கோவையில் போலிச் சான்றிதழ் பெற்ற வழக்கு ஒன்றில் ஆயுள் தண்டனை கைதியின் தந்தைக்கு மூன்று ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
கோவை மாநகரிலுள்ள உக்கடம் மஜீத் காலனியை சேர்ந்தவர் கூளை இப்ராகிம். இவருடைய கூட்டாளிகள் இருவருடன் சேர்ந்து 1997 ஆம் ஆண்டில் இந்து அமைப்பை சேர்ந்த கண்ணன் என்பவரை கொலை செய்ததாக தொடரப்பட்ட வழக்கில், மூவருக்கும் கோவை கோர்ட்டில், 2003 இல் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது.

இது தொடர்பாக தொடரப்பட்ட மேல் முறையீட்டில், சென்னை உயர்நீதி மன்றம் 2004 இல் தண்டனையை உறுதி செய்தது. பிறகு, கூளை இப்ராகிம் கைதான போது, 18 வயது நிரம்பாத சிறார் என்பதால், அவரை விடுவிக்க கோரி, பிறப்புச்சான்றிதழ் ஆவணங்களுடன் சுப்ரீம் கோர்ட்டில் அவரது தந்தை அப்துல் ரசாக் மனு தாக்கல் செய்தார்.
ஆவணத்தின் உண்மை தன்மை குறித்து விசாரிக்க, சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டது. இது தொடர்பாக கோவை மாநகர போலீசார் மேற்கொண்ட விசாரணையில், கூளை இப்ராகிம் தந்தை அப்துல் ரசாக் என்பவர் போலியான கல்விச் சான்றுகளை பெற்று, கோர்ட்டில் மனு தாக்கல் செய்தது தெரியவந்தது.
இதையடுத்து, அப்துல் ரசாக், கூளை இப்ராகிம் ஆகியோர் 2014 ஜூலை மாதம் கைது செய்யப்பட்டனர். அவர்கள் மீது கோவை எட்டாவது குற்றவியல் நடுவர் நீதி மன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டது.
மாநகராட்சி பிறப்பு இறப்பு சான்றிதழ் அதிகாரிகள், உதவி துவக்க கல்வி அலுவலர், ஜெயில் சூப்பிரெண்டுமற்றும் தடய அறிவியல் நிபுணர்கள், விசாரணை அதிகாரி இன்ஸ்பெக்டர் கனகசபாபதி உட்பட 12 பேர் முக்கிய சாட்சிகளாக விசாரிக்கப்பட்டனர்.
வழக்கை விசாரித்த மாஜிஸ்திரேட் வேடியப்பன் அப்துல் ரசாக்கிற்கு மூன்று ஆண்டு சிறை தண்டனை, ரூபாய் 50 ஆயிரம் அபராதம் விதித்து தீர்ப்பளித்தார். போலி சான்றிதழ் பெற்ற வழக்கில் இருந்து கூளை இப்ராகிம் விடுதலை செய்யப்பட்டார்.












Click it and Unblock the Notifications