மகள் கல்யாண சீர்வரிசைப் பொருட்களை விற்றுக் குடித்த தந்தை... தட்டிக் கேட்ட மகனை வெட்டித் தள்ளினார்!
திருவாரூர்: தனது தங்கையின் கல்யாணத்துக்காக வாங்கி வைத்திருந்த சீர்வரிசைப் பொருட்களையெல்லாம் விற்று குடித்த தந்தையைப் பார்த்து ஆத்திரமடைந்த மகன் அவருடன் சண்டை பிடித்தார். இதனால் ஆத்திரமடைந்த தந்தை, மகன் என்றும் பாராமல் வெட்டிக் கொலை செய்து விட்டார்.
குடியால் அழியும் குடும்பங்கள் தமிழகத்தில் நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றன. குடியின் கொடுமைக்கு முடிவே இல்லாமல் போய்க் கொண்டிருக்கிறது. இந்த நிலையில் திருவாரூரில் குடிகார தந்தையால் ஒரு மகன் அநியாயமாக உயிரிழந்துள்ளார்.

திருவாரூர் திலகர் தெருவைச் சேர்ந்தவர் செல்வராஜ் (56). இவா் வேலைக்கு செல்லாமல் குடித்து விட்டு குடும்பத்தினரிடம் அடிக்கடி தகராறில் ஈடுபட்டு வந்துள்ளார். இவருடைய மகன் செல்வகுமார் (23). கட்டடத் தொழிலாளியாக வேலைபார்த்து வந்த இவர் கஷ்டப்பட்டு சம்பாதித்த பணத்தில் தனது சகோதரியிந் திருமணத்துக்கு சீர்வரிசைப் பொருட்களை வாங்கி வைத்திருந்தார். அதையும் செல்வராஜ் குடிப்பதற்காக விற்று விட்டார்.
இதனால் கொதிப்படைந்த செல்வகுமார் தனது தந்தையைத் திட்டியுள்ளார். அவருடன் சண்டை பிடித்துள்ளார். இந்த நிலையில், செப்டம்பர் 1ம் தேதி பிற்பகலில் நன்றாக குடித்து விட்டு போதையில் வீட்டுக்கு வந்தார் செல்வராஜ். அப்போது அப்பாவுக்கும், மகனுக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. அதில் ஆத்திரத்தின் உச்சிக்குப் போன செல்வராஜ், வீட்டில் கிடந்த கோடாரியை எடுத்து மகனின் கழுத்தில் ஓங்கி வெட்டி விட்டார். இதில் ரத்த வெள்ளத்தில் மிதந்த செல்வக்குமார் பரிதாபமாக உயிரிழந்தார்.
திருவாரூர் போலீஸார் வழக்குப் பதிவு செய்து தலைமறைவான செல்வராஜை தேடிப் பிடித்துக் கைது செய்தனர்.












Click it and Unblock the Notifications