மன வளர்ச்சி இல்லாத மகள்.. செலவுக்கு வழியில்லை.. கழுத்தை நெரித்து கொன்ற தந்தை!
மன வளர்ச்சி குன்றிய மகளை கொன்ற தந்தை கைது செய்யப்பட்டார்.
ஸ்ரீவில்லிப்புத்தூர்: மனநலம் பாதிக்கப்பட்ட மகளை பூச்சி மருந்துகொடுத்து கடைசியில் கொன்றே விட்டனர் சுமந்து பெற்றவர்கள்.
ஸ்ரீவில்லிப்புத்தூரை அடுத்து வாழைக்குளம் என்ற கிராமம் உள்ளது. இந்த கிராமத்தில் வசித்து வந்த தம்பதி முனீஸ்வரன் - ரேவதி. கல்யாணம் ஆகி 10 வருஷமாச்சு. 9 வயதில் ஒரு பெண் குழந்தை. அவள் பெயர்தான் சாதனா. பிறந்ததிலிருந்தே மன வளர்ச்சி இல்லாத குழந்தை. ஒரே பிள்ளை என்பதால் தாய்-தகப்பன் இருவருமே பாசத்தையும், அன்பையும் கொட்டினர்.
பிடித்து ஆட்டிய வறுமை
மற்றொரு பக்கம் மனவளர்ச்சி குன்றி இருப்பதால் அதற்கு சிகிச்சையும் மேற்கொள்ளப்பட்டது. இதற்கு ஆகும் செலவு கொஞ்ச நஞ்சமல்ல. தம்பதி இருவருமே நல்ல வேலையில் இருந்தனர். அதனால் கணக்கு பார்க்காமல் சம்பாதித்த அனைத்தையும் மகளின் சிகிச்சைக்கே செலவு செய்தனர். ஆனால் விதி யாரை விட்டது. வேலை பறிபோனது... வறுமை பிடித்து கொண்டது... குடும்பம் கதியின்றி தவித்தது... கூடவே சாதனாவின் சிகிச்சையும் நின்றது!
பூச்சிக் கொல்லி மருந்து
மகளை பார்க்க பார்க்க நெஞ்சே வெடித்தது பெற்றோருக்கு... கையில் பணமில்லாமல் செல்வ மகளை கவனிக்க முடியவில்லை. அதனால் மகளை கொன்றுவிட முடிவு செய்தனர் பெற்றோர். அதன்படி கடந்த 2-ம் தேதி வீட்டுக்கு பக்கத்திலேயே இருந்த ஒரு கோயிலுக்கு மகளை அழைத்து சென்றார்கள். அங்கு பூச்சிக் கொல்லி மருந்தை கொடுத்து குடிக்க வைத்தார்கள்.
கழுத்தை நெறித்தார்
அதோடு விட்டார்களா, மகளின் கழுத்தை பெற்ற தந்தையே நெறிக்க தொடங்கினார். கோயிலுக்குள் இருந்த பக்தர்கள், பொதுமக்கள் பார்த்துவிட்டு பதறி ஓடிவந்தார்கள். பின்னர் சாதனாவை பெற்றோரிடமிருந்து மீட்டனர். அதற்குள் சாதனா வாயிலிருந்து நுரை தள்ள தொடங்கியது. உடனடியாக பொதுமக்கள் அரசு மருத்துவமனைக்கு சாதனாவை அனுமதித்தனர். பெற்றோரை கண்டமேனிக்கு திட்டி எச்சரித்தனர். பிறகு அப்பகுதி போலீசாருக்கும் தகவல் அளித்தனர்.
உயிரை விட்டாள் சாதனா
தகவலறிந்த காவல்துறையினர் தந்தையை கைது செய்தனர். மருத்துவமனையில் உயிருக்கு போராடி வந்த மகளை கவனிக்க தாயை அனுப்பி வைத்தனர். ஆனால் சாதனாவின் நிலை இன்னும் மோசமானது. உடனடியாக மதுரை ராஜாஜி மருத்துவமனைக்கு கொண்டு சென்றார்கள். தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தும் சாதனா நேற்று பரிதாபமாக உயிரை விட்டாள்!