மனைவி மீது சந்தேகம்.. 3 வயது குழந்தையை உயிரோடு எரித்த கொன்ற தந்தை.. சிதம்பரத்தில் ஷாக்!
சிதம்பரம் அருகே மனைவி மீது ஏற்பட்ட சந்தேகம் காரணமாக 3 வயது பெண் குழந்தையை தந்தையே எரித்துக்கொன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சிதம்பரம்: சிதம்பரம் அருகே மனைவி மீது ஏற்பட்ட சந்தேகம் காரணமாக வாய்ப்பேச முடியாத 3 வயது பெண் குழந்தையை தந்தையே உயிரோடு மண்ணெண்ணெய் ஊற்றி எரித்துள்ளார். இதில் படுகாயமடைந்த அந்த குழந்தை சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தது. இந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுதியுள்ளது.
கடலூர் மாவட்டம், சிதம்பரத்தை அடுத்த குமராட்சி அருகே உள்ள திருநாரையூர் கிராமத்தை சேர்ந்தவர் ஆறுமுகம். இவரது மனைவி நதியா. இந்த தம்பதிக்கு அனுஸ்ரீ என்ற 3 வயது குழந்தை இருந்தது.
குடிபோதைக்கு அடிமையான ஆறுமுகம் குடித்துவிட்டு அடிக்கடி மனைவி நதியா மீது சந்தேகப்பட்டு தகராறில் ஈடுபட்டு வந்துள்ளார். நேற்று வழக்கம்போல் ஆறுமும் நதியாவுடன் சண்டைபோட்டுள்ளார்.
ஆத்திரம் கொண்ட ஆறுமுகம்
இதனால் மனமுடைந்த நதியா குழந்தை அனுஸ்ரீயை வீட்டில் விட்டு தனது டி.நெடுஞ்சேரியில் உள்ள தனது தாய்வீட்டுக்கு சென்றுவிட்டார். இதையடுத்து இரவு மதுபோதையில் வீட்டிற்கு வந்த ஆறுமுகம் மனைவி நதியாவை காணதால் பெரும் ஆத்திரம் கொண்டுள்ளார்.
குழந்தை உயிரோடு எரிப்பு
அப்போது குழந்தை அனுஸ்ரீ தூங்கிக்கொண்டிருப்பதைக் கண்ட ஆறுமுகம் வீட்டில் இருந்த மண்ணெண்ணெயை எடுத்து குழந்தை மீது ஊற்றி உயிரோடு தீ வைத்துள்ளார். இதில் உடல் முழுவதும் பற்றி எரிந்ததால் குழந்தை அலறி துடித்தாள்.
குழந்தையை மீட்ட அக்கம்பக்கத்தினர்
குழந்தை அலறும் சத்தத்தைக் கேட்டு ஓடிவந்த அக்கம் பக்கத்தினர் குழந்தை எரிந்துக்கொண்டிருப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்தனர். உடனடியாக குழந்தையை மீட்டு சிதம்பரம் ராஜா முத்தையா மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.
பலியான குழந்தை
அங்கு தீக்காயங்களுடன் இருந்த குழந்தைக்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சையளித்தனர். இருப்பினும் குழந்தை சிகிச்சைப் பலனின்றி இன்று காலை உயிரிழந்தாள்.
தந்தை ஆறுமுகம் கைது
இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் குழந்தையை உயிருடன் எரித்துக்கொன்ற தந்தை ஆறுமுகத்தை கைது செய்தனர். இதுதொடர்பாக ஆறுமுகத்திடம் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
வாய்பேச முடியாதவர் - தகவல்
உயிரிழந்த குழந்தை அனுஸ்ரீ வாய்ப் பேச முடியாதவர் என தெரிகிறது. 3 வயது பெண் குழந்தையை தந்தையே உயிரோடு தீ வைத்து எரித்துக்கொன்ற சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சிய ஏற்படுத்தியுள்ளது.