'பிக் ஷாப்பர்' பையில் போட்டு கேட்டில் தொங்க விடப்பட்ட சிசு.. காப்பாற்றிய பத்திரிகையாளர்கள்
நெல்லை: நெல்லையில் பிறந்து சில மணி நேரங்களே ஆன இளம் பெண் சிசு ஒன்று ஒரு பெரிய பையில் போட்டு அதை பாளையங்கோட்டையில், அரசினர் சித்தா அரசு மருத்துவக் கல்லூரி நூற்றாண்டு மண்டப இரும்பு கேட்டில் தொங்க விட்டுச் சென்றுள்ளனர். அதை பத்திரிகையாளர்கள் பார்த்து மீட்டு மருத்துவமனையில் ஒப்படைத்து சிசுவைக் காப்பாற்றியுள்ளனர்.
பாளையங்கோட்டை சித்தா அரசு மருத்துவக்கல்லூரி அருகே நூற்றாண்டு மண்டபத்தின் கேட்டில் நேற்று காலையில் ஒரு துணிக்கடை பிக் ஷாப்பர் பை தொங்க விடப்பட்டிருந்தது. அதில் இருந்து குழந்தை அழும் குரல் கேட்டதால் அந்த வழியே சென்றவர்கள் அதனை கவனித்தனர்.
அதில் பிறந்து சில மணிநேரங்களே ஆன தொப்புள்கொடி கூட பிரிக்கப்படாத பச்சிளம் பெண் குழந்தை, ஒரு துணியில் பொதிந்து வைக்கப்பட்டிருந்தது. இதுகுறித்து தொட்டில் குழந்தைகள் காப்பகத்திற்கும் பொதுமக்கள் தகவல் தெரிவித்தனர்.
இருப்பினும் குழந்தையை எடுத்துச்செல்ல தாமதம் ஆனதால் செய்தி சேகரிக்கச்சென்ற பத்திரிகையாளர்கள் இருவர் பச்சிளம் குழந்தையை நெல்லையில் உள்ள சரணாலயம் தொட்டில் குழந்தைகள் திட்ட மையத்திற்கு உடனடியாக கொண்டு சென்று சேர்த்தனர்.
குழந்தைக்கு சிகிச்சையளிக்கப்பட்டு புதிய உடை அணிவிக்கப்பட்டது. அந்த பச்சிளம் பெண் குழந்தை தற்போது நன்றாக உள்ளது. இதுகுறித்து சரணாலய தொண்டு நிறுவன காப்பாளர் மோட்சராஜன் அடிகள் கூறுகையில், அனாதையாக விடப்பட்ட பச்சிளம் குழந்தை உடனடியாக கொண்டுவரப்பட்டதால் உயிர்பிழைத்துள்ளது. தற்போது சிகிச்சையளித்துள்ளோம். இது தமிழக அரசின் தொட்டில் குழந்தைகள் திட்டத்தில் 277வது குழந்தையாகும் என்றார்.