அன்னிய செலாவணி மோசடி... தினகரன் மீது குற்றச்சாட்டுகள் பதிவு!
சென்னை: தினகரன் மீதான அன்னிய செலாவணி மோசடி வழக்கில் இன்று சென்னை எழும்பூர் நீதிமன்றத்தில் குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்பட்டன.
கடந்த 1996ஆம் ஆண்டு, ஜெ.ஜெ. டிவிக்கு உபகரணங்கள் வாங்கியதில் ரூ.28 கோடி அன்னிய செலாவணி மோசடி செய்ததாக டிடிவி தினகரன் மீது அமலாக்கத்துறை இரு வழக்குகளை பதிவு செய்தது. இது தொடர்பான வழக்கு எழும்பூர் அல்லிக்குளம் பொருளாதார நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது.

இந்த நிலையில் சசிகலா, பாஸ்கரன், சுதாகரன் ஆகியோர் மீதும் வழக்கு பதிவு செய்யப்பட்டது. சசிகலா ஏற்கெனவே பெங்களூர் சிறையில் உள்ளதால் அவரிடம் வீடியோ கான்பிரன்சிங்கில் விசாரணை நடத்தப்படும் என்று நீதிபதி ஏற்கெனவே உத்தரவிட்டிருந்தார்.
இதைத் தொடர்ந்து இந்த வழக்கு தொடர்பாக அமலாக்கத் துறை தம்மிடம் கேட்க வேண்டிய கேள்விகளை முன்கூட்டியே அளிக்க வேண்டும் என்று சசிகலா சார்பில் எழும்பூர் நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்யப்பட்டுள்ளது. இதன் மீதான விசாரணை வரும் 12-ஆம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.
இந்த வழக்கில் ஆஜர்படுத்துவதற்காக சிறையில் உள்ள சுதாகரனை அழைத்து வருவதில் பாதுகாப்பு குளறுபடிகள் உள்ளதால் அவரை சென்னை அழைத்து வரும் முடிவை கர்நாடக சிறைத் துறை கைவிட்டது. இந்நிலையில் நேரில் ஆஜராக விலக்கு கேட்டும், வீடியோ கான்பரன்சிங் மூலம் விசாரணை நடத்த அனுமதிக்க கோரியும் சுதாகரன் சார்பில் மனு தாக்கல் செய்ய உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
அன்னிய செலாவணி மோசடி வழக்கில் இன்று எழும்பூர் நீதிமன்றத்தில் தினகரன் மீது குற்றச்சாட்டு பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கை வரும் 22-ஆம் தேதிக்கு நீதிபதி ஒத்திவைத்தார். வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட பாஸ்கரன் மீது ஏற்கெனவே குற்றச்சாட்டு பதிவு செய்யப்பட்டு விட்டது.












Click it and Unblock the Notifications