அன்னிய செலாவணி மோசடி வழக்கு: சசிகலாவை காணொலி மூலம் விசாரிக்க உத்தரவு
அன்னிய செலாவணி மோசடி வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட சசிகலா, தற்போது சொத்துக் குவிப்பு வழக்கில் சிறையில் உள்ளதால் அவரை காணொலி காட்சி மூலம் விசாரணை நடத்த எழும்பூர் நீதிமன்றம் அனுமதித்துள்ளது.
சென்னை: அன்னிய செலாவணி மோசடி வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட சசிகலா, தற்போது சொத்துக் குவிப்பு வழக்கில் சிறையில் உள்ளதால் அவரை காணொலி காட்சி மூலம் விசாரணை நடத்த எழும்பூர் நீதிமன்றம் அனுமதித்துள்ளது.
ஜெ.ஜெ.டிவிக்கு வெளிநாடுகளில் இருந்து கடந்த 1996-97-ஆம் ஆண்டு ஒளிபரப்பு சாதனங்கள் வாங்குவதற்காக பல கோடி ரூபாய் முதலீடு செய்யப்பட்டது. இதில் மத்திய அரசின் அனுமதியின்றி வெளிநாட்டு நிறுவனங்களுடன் பணப் பரிவர்த்தனையில் ஈடுபட்டதாக சசிகலா, பாஸ்கரன் மற்றும் ஜெ.ஜெ. டிவி ஆகியவற்றின் மீது 5 வழக்குகளை அமலாக்கத்துறை பதிவு செய்தது.
கடந்த 20 ஆண்டுகளாக சென்னை எழும்பூர் அல்லிக்குளம் நீதிமன்றத்தில் இந்த வழக்கு விசாரணை நடைபெற்று வருகிறது. இந்நிலையில் இந்த வழக்கானது இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது ஆஜரான பாஸ்கரன் மீது குற்றச்சாட்டுகளை பதிவு செய்த நீதிபதி,வழக்கு விசாரணையை மே 10-ஆம் தேதிக்கு ஒத்திவைத்தார். மேலும் அன்றைய தினமே அரசு தரப்பு சாட்சிகள் குறுக்கு விசாரணை செய்யப்படுவர் எனவும் நீதிபதி கூறியுள்ளார்.
இந்நிலையில் ஜெ.ஜெ.டிவிக்கு உபகரணங்களை வெளிநாட்டில் இருந்து இறக்குமதி செய்தது தொடர்பாக சசிகலா மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதால் அவரிடமும் விசாரணை நடத்தி குற்றச்சாட்டுகள் பதிவு செய்ய வேண்டும் என்று நீதிபதி தெரிவித்திருந்தார். எனினும் சொத்துக் குவிப்பு வழக்கில் சசிகலா பெங்களூர் பரப்பன அக்ரஹார சிறையில் உள்ளாதாலும், அவரது உடல்நிலை மோசமாக உள்ளதாலும் அவரை காணொலி காட்சி மூலம் விசாரணை நடத்த சசிகலா தரப்பு வழக்குறிஞர் அனுமதி கோரினார்.
இந்த வழக்கானது இன்று மாலை 4 மணிக்கு விசாரணைக்கு வந்தது. அப்போது சசிகலாவிடம் வரும் 2 வாரங்களுக்குள் காணொலி காட்சி மூலம் விசாரணை நடத்த வேண்டும் என்று நீதிபதி உத்தரவிட்டார். அத்துடன் பெங்களூரு சிறை நிர்வாகம் ஒப்புதல் தந்தால்தான் காணொலி காட்சி மூலம் விசாரணை நடத்த முடியும் எனவும் நீதிபதி திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.