என்னை யாரென்று தெரியாது என ஈவிகேஎஸ் பகலில் கூறினாரா? இரவில் கூறினாரா? கேட்கிறார் திருநாவுக்கரசர்
தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் திருநாவுக்கரசர் மற்றும் முன்னாள் தலைவர் ஈவிகேஎஸ் இளங்கோவன் இடையே கருத்து மோதல் தீவிரமடைந்துள்ளது.
மதுரை: என்னை யார் என்று தெரியாது என ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் இரவில் கூறினாரா? அல்லது பகலில் கூறினாரா? என்று தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் திருநாவுக்கரசர் கேள்வி எழுப்பியுள்ளார்.
காங்கிரஸ் கட்சியையும் சர்ச்சையும் பிரிக்கவே முடியாது என்பதை முன்னாள் தலைவர் ஈவிகேஎஸ் இளங்கோவனுக்கும் இன்னாள் தலைவர் திருநாவுக்கரசருக்கும் இடையே அதிகரித்து வரும் முட்டல் மோதல்கள் மூலம் நிரூபணம் ஆகிவருகிறது.
திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் பிறந்தநாள் விழாவில் பங்கேற்க வந்த ஈவிகேஎஸ் இளங்கோவன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, திருநாவுக்கரசர் குறித்த கேள்விக்கு பதிலளித்த அவர், திருநாவுக்கரசர் யார் என்றே தெரியாது என்று கூறிவிட்டு சென்றார். இதற்கு அவருடன் இருந்தவர்கள் சிரித்தனர்.
இதையடுத்து திருநாவுக்கரசர், என்னைத் தெரியாது என்று ஈவிகேஎஸ் இளங்கோவன் கூறியது நல்லது தான். என்னைத் தெரியாது என்று கூறியதால் இனிமேல் என்னை அவர் திட்ட மாட்டார். தெரிந்தவர்களைத் தான் திட்ட முடியும் தெரியாதவர்களை எப்படித் திட்ட முடியும் என்று கூறியிருந்தார்.
இந்தநிலையில் மதுரை விமான நிலையத்தில் தமிழக காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசர் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர்: தமிழக அரசு அனுமதியளிக்கவில்லை என்றால் நெடுவாசலலில் எந்த திட்டமாக இருந்தாலும் அதை மத்திய அரசு அமல்படுத்தக்கூடாது.
சட்டமன்றத்தை உடனடியாக கூட்டி தீர்மானம் நிறைவேற்றி, அதற்கான சட்ட மசோதவை நிறைவேற்ற முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி முன்வரவேண்டும். மத்திய அரசும் தனது பிடிவாதத்தை தளர்த்த வேண்டும். தமிழகத்தின் 9 லட்சம் மாணவர்களின் எதிர்காலத்தை கேள்விக் குறியாக்கும் நீட் தேர்வில், தமிழகத்திற்கு விதிவிலக்கு தர வேண்டும். அதை வலியுறுத்தி வரும் 13ம் தேதி சென்னையில் கண்டன ஆர்பாட்டம் நடத்தப்படும் என்று கூறினார்.
மேலும் அவர் கூறுகையில், என்னை தெரியாது என்று கூறிய இளங்கோவன், தெரியாத என்னை விமர்சிக்க கூடாது. பொதுவாக வயதானால் இது போன்ற மறதி ஏற்படுவது வழக்கம். அதுமட்டுமில்லாமல், இளங்கோவன் அந்த கருத்தை பகலில் சொன்னாரா? இரவில் சொன்னாரா என்பதையும் கவனிக்க வேண்டும் என திருநாவுக்கரசர் தெரிவித்தார்.