மதன் கைது... என்னென்ன உண்மைகள் வெளிவருமோ? பரபரப்பில் தமிழ் திரையுலகம்!
சென்னை: வேந்தர் மூவீஸ் மதன் கைதாகிவிட்டார். 6 மாத கண்ணாமூச்சு ஒரு வழியாக முடிவுக்கு வந்திருக்கிறது. மதன் கைதுக்கு பின்னணியில் சொல்லப்படும் போலீஸ் கதைகள், ராம்குமார் மின்சார ஒயரைக் கடித்த மாதிரிதான். அப்படியே நம்பிவிடத் தேவையில்லை.
காரணம், மதன் ஏற்கெனவே கைதாகிவிட்டார்... போலீஸ் கஸ்டடியில் இருக்கிறார் என கடந்த ஒரு மாத காலமாக வதந்திகள் வலம் வந்து கொண்டிருக்கின்றன. ஏதோ ஒரு சுபயோக சுபதினமாகப் பார்த்து போலீசார் அறிவிப்பார்கள் என்பதுதான் திரையுலகினரின் எதிர்ப்பார்ப்பாக இருந்தது. அது நிஜமாகியிருக்கிறது என்று வேண்டுமானால் எடுத்துக் கொள்ளலாம்.

மதன் தலைமறைவானதும், அவர் வரவு செலவு வைத்திருந்த பெரும்பாலானோர் பெரும் கவலையில் ஆழ்ந்தார்கள். இவரை நம்பி பல கோடிகள் கடன் தந்திருந்தனர், முதலீடு செய்திருந்தனர். அவர்களுக்கெல்லாம் ஒரு சிறு நம்பிக்கை.
அதே நேரம், மதனின் திருவிளையாடல்கள் என்னென்ன என்பதை யாரும் வெளியில் சொல்லவில்லை. அவர் காணாமல் போன பிறகு, அவருக்கு நெருக்கமான சிலரிடம் விசாரித்தபோது கூட, 'அட.. அவர் அநியாயத்துக்கு பக்திமானுங்க... நாள் கணக்கில் சாப்பிடாமல் விரதமிருப்பார். சாமி படங்கள், பூஜை புனஸ்காரம் என்றுதான் பொழுதைக் கழிப்பார்..' என்றார்கள்.
இப்போது மதன் பிடிபட்டுவிட்டார். அவர் வாயிலிருந்து என்னென்ன உண்மைகள் வெளிவரப் போகிறதோ... குறிப்பாக பாரிவேந்தர், எஸ்ஆர்எம் தொடர்பாக என்னென்ன சொல்லப் போகிறாரோ... திரையுலகினர் யாரெல்லாம் இதில் சிக்கப் போகிறார்களோ என்ற முணுமுணுப்பு கேட்க ஆரம்பித்துள்ளது. உண்மைகள் வெளிவருமா... உள்ளுக்குள்ளேயே கமுக்கமாக வைக்கப்படுமா... பார்க்கலாம்!












Click it and Unblock the Notifications