சேலத்தில் கார் உதிரி பாக விற்பனைக் கடையில் தீவிபத்து
சேலத்தில் கார் உதிரி பாக விற்பனைக் கடையில் ஏற்பட்ட தீவிபத்தில் கோடிக்கணக்கான ரூபாய் இழப்பு ஏற்பட்டுள்ளது.
சேலம் : சேலம் அழகாபுரத்தில் உள்ள கார் உதிரிபாகம் விற்பனைக் கடையில் இன்று அதிகாலை ஏற்பட்ட தீ விபத்தில் கோடிக்கணான ரூபாய் மதிப்பிலான பொருட்கள் எரிந்து சேதமானது. தொடர்ந்து எரிந்து வரும் தீயை அணைக்க தீயணைப்புத்துறையினர் முயற்சி செய்துவருகின்றனர்.
சேலம் மாவட்டத்தின் முக்கியப்பகுதியான அழாகபுரத்தில் கோவையைச் சேர்ந்த சதீஷ் என்பவர், தனம் கார் உதிரிபாக நிறுவனத்தை நடத்தி வந்தார். இன்று அதிகாலை அந்தக்கடையில் திடீர் தீவிபத்து ஏற்பட்டது.
கடையில் பிளாஸ்டிக் மற்றும் பைபர் பொருட்கள் அதிகம் இருந்ததால், தீ கட்டுக்கடங்காமல் எரிந்து வருகிறது. இதனால் அனைத்துப்பகுதிகளிலும் புகை மூட்டம் சூழ்ந்து, மக்கள் மூச்சுவிடமுடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
காலை 6 மணியில் இருந்து எரிந்து வரும் தீயைக் கட்டுப்படுத்த, தீயணைப்புத்துறையினர் தீவிர முயற்சி எடுத்து வருகின்றனர். இந்தக்கடை அமைந்து இருக்கும் பகுதியில், இரண்டு பள்ளிகளும், பல்வேறு அடுக்குமாடிக் குடியிருப்புகளும் அமைந்துள்ளதால் அசம்பாவிதத்தை தவிர்க்க போலீஸார் முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.
தீ பெருமளவு கட்டுப்படுத்தப்பட்டுவிட்டாதாக காவல்துறை துணை ஆணையர் தெரிவித்துள்ளார். மேலும் விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை நடந்துவருவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.