நின்ற ரயிலில் திடீர் தீ.. விழுப்புரம் ரயில் நிலையத்தில் நள்ளிரவில் பரபரப்பு
விழுப்புரம்: விழுப்புரம் ரயில்வே பிளாட்பார்மில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த பயணிகள் ரயிலில் திடீர் தீ விபத்து ஏற்பட்டது. இரண்டு மணி நேரமாக போராடிய தீயணைப்பு வீரர்கள் தீயை கட்டுக்குள் கொண்டுவந்தனர்.
விழுப்புரம் ரயில் நிலையத்தில் இருந்து இன்று காலை காட்பாடி செல்வதற்காக 3வது நடை மேடையில் நின்று கொண்டிருந்த பாசஞ்சர் ரயில் தீ பிடித்து விபத்திற்குள்ளானது. தீ பற்றியதில் ரயிலின் இரண்டாவது பெட்டி முழுவதும் சேதம் அடைந்துள்ளது.

இது குறித்து தகவல் அறிந்து வந்த தீயணைப்பு வீரர்கள் தொடர்ந்து தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். உட்புறமாக கதவு பூட்டப்பட்டிருந்ததால் தீயை அணைக்க கடுமையாக போராடினர். சுமார் 2 மணிநேர போராட்டத்திற்கு பின்னர் தீ அணைக்கப்பட்டது.
இந்த தீ விபத்தில் அதிர்ஷ்டவசமாக பயணிகளுக்கு எந்தவித சேதமும் ஏற்படவில்லை. தீ விபத்து குறித்து ரயில்வே போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். நின்றுகொண்டிருந்த ரயிலில் திடீரென நள்ளிரவில் தீ பற்றி எரிந்தது விழுப்புரம் ரயில் நிலையத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது.












Click it and Unblock the Notifications