திருவண்ணாமலை: தீயணைப்பு அலுவலர் மணிகண்டன் மர்ம மரணம் - உயரதிகாரிகள் திட்டியதாக புகார்
திருவண்ணாமலை: தீயணைப்புத்துறை அலுவலர் ஒருவர் மர்மமான முறையில் உயிரிழந்த சம்பவம் திருவண்ணாமலை மாவட்டத்தில் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. உயரதிகாரிகளின் டார்ச்சர் காரணமாகவே அவர் தற்கொலை செய்து கொண்டதாக புகார் எழுந்துள்ளது.
உயிரிழந்த அலுவலரின் பெயர் மணிகண்டன் என்பதாகும். இவர் திருவண்ணாமலையில் தீயணைப்புத்துறையில் பணிபுரிந்து வந்தார். கடந்த 19ம் தேதி அலுவலகத்திற்கு ஆய்வு மேற்கொள்ள வந்த மாவட்ட தீயணைப்பு அலுவலர் ராமசாமி, மணிகண்டனை தரக்குறைவாக பேசியதாக கூறப்படுகிறது.
இதனால் மனமுடைந்த மணிகண்டன் விஷம் அருந்தியதாகவும், இதையடுத்து திருவண்ணாமலை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் மணிகண்டன் அனுமதிக்கப்பட்டார்.
நான்கு நாள் சிகிச்சைக்குப் பிறகு, மணிகண்டனிடம் விசாரணை மேற்கொண்ட உயர் அதிகாரிகள், அவரை இடமாற்றம் செய்தனர். மாவட்ட தீயணைப்பு அலுவலர் ராமசாமி நாகப்பட்டிணம் மாவட்டத்திற்கு மாற்றப்பட்டார்.
கடந்த 26ம் தேதி திருவள்ளூர் மாவட்டம் பள்ளிப்பட்டில் மணிகண்டன் பணியில் சேர்ந்தார். இந்நிலையில், மணிகண்டன் நேற்றிரவு பள்ளிப்பட்டில் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டதாக அவரது உறவினர்கள் தெரிவித்தனர்.
பள்ளிப்பட்டு காவல்துறையினரோ மணிகண்டன் மாரடைப்பால் உயிரிழந்ததாக வழக்குப் பதிவு செய்துள்ளனர். அவரது உடல் வேலூர் மாவட்டம் சோளிங்கர் அரசு மருத்துவமனையில் வைக்கப்பட்டிருக்கிறது. இதனிடையே, உயிரிழக்கும் முன்பாக மணிகண்டன் பேசியிருப்பதாக வீடியோ காட்சி ஒன்று வாட்ஸ் ஆப்பில் வெளியாகி இருக்கிறது.
தீயணைப்புத்துறையில் பணிபுரியும் அலுவலர் ஒருவர் விஷம் அருந்தி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.












Click it and Unblock the Notifications