காஞ்சிபுரம் அருகே மதுபான கிடங்கிற்கு தீவைப்பு.. 3 லாரிகள், ரூ.80 லட்சம் மது பாட்டில்கள் நாசம்!
காஞ்சிபுரம் அருகே மதுபான கிடங்கிற்கு மர்மநபர்கள் தீ வைத்து தப்பி சென்றனர்.
Recommended Video
காஞ்சிபுரம்: ஓரிக்கையில் அரசு மதுபான கிடங்கினுள் மதுபானங்களுடன் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த 3 லாரிகளுக்கு மர்ம நபர்கள் தீ வைத்ததில், 80 லட்ச ரூபாய் மதிப்பிலான மதுபான பாட்டில்களுடன் லாரிகளும் தீயில் எரிந்து நாசமானது.
காஞ்சிபுரம் அருகே உள்ள ஓரிக்கை பகுதியில் தமிழ்நாடு மாநில வாணிப கழகம் சார்பில் அரசு மதுபான கிடங்கு செயல்பட்டு வருகிறது. இந்த கிடங்கிற்கு சென்னை, வாலாஜாபாத், புதுக்கோட்டை போன்ற இடங்களின் மதுபான தொழிற்சாலைகளிலிருந்து லாரிகளில் மதுபானங்களை ஏற்றி கொண்டு வந்து கிடங்கின் உள்ளே நிறுத்திவிடுவார்கள்.
இந்நிலையில் நேற்று நள்ளிரவும் அதேபோல, மதுபானங்கள் அடங்கிய 3 லாரிகள் உள்ளே நிறுத்தி வைக்கப்பட்டிருந்தன. இந்த 3 லாரிகளுக்கு மர்ம நபர்கள் சிலர் தீ வைத்துள்ளனர். இதனால் லாரிக திடீரென தீ பிடித்து எரிய தொடங்கியது. கிடங்கினுள் தீ பிடித்து எரிவதை கண்ட அங்கிருந்தோர் தீயணைப்பு துறையினருக்கு உடனடியாக தகவல் அளித்ததனர். விரைந்து வந்த அவர்கள் தீயை போராடி அணைத்து பெரும் சேதத்தை தவிர்த்தனர்.
எனினும், கிடங்கின் உள்ளே நிறுத்தி வைக்கப்பட்டிருந்த 3 லாரிகளும், அதிலிருந்த மதுபான பாட்டில்கள் என ரூ.80 லட்சம் மதிப்பிலான பொருட்களும் தீயில் எரிந்து நாசமானது. இந்த தீ வைப்பு சம்பவம் குறித்து காஞ்சிபுரம் தாலூகா போலீஸார் விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்.